பிரிஸ்பேன்: வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது முதன்மை ஸ்பின்னராக அஸ்வினை இந்திய அணி தேர்வு செய்ய தொடர்ந்து தயக்கம் காட்டுவதாலேயே அவர் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் பாதியிலேயே ஓய்வை அறிவித்திருப்பதாக பார்க்கப்படுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. இது அஸ்வினின் மனதில் ஆறாத காயமாக மாறியது. இதுகுறித்து அஸ்வின் பேசுகையில், ஏன் பேட்ஸ்மேனாக இருந்து பவுலராக மாறினோம் என்ற வருத்தம் ஏற்படுகிறது. எந்த பேட்ஸ்மேனையும் ஆடுகளத்திற்கு ஏற்ப பெஞ்ச் செய்ய மாட்டார்கள்.

ஃபார்மை மட்டுமே பார்ப்பார்கள். ஆனால் பவுலர்களை, குறிப்பாக ஸ்பின்னர்களை மட்டும் மிக சாதாரணமாக பெஞ்ச் செய்துவிடுகிறார்கள் என்று பேசியிருந்தார். ஏனென்றால் 2018 -19 தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு பின் இந்திய அணியில் அஸ்வினின் பவுலிங் அபரிதமான முன்னேற்றம் அடைந்தது. அதேபோல் பேட்டிங்கிலும் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.
இதனால் வெளிநாடுகளில் விளையாடும் போதும் முதன்மை ஸ்பின்னராக இருக்க வேண்டும் என்பதே அஸ்வினின் விருப்பமாக இருந்துள்ளது. ஐசிசி டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் டாப் பவுலராக இருப்பதால், அஸ்வினின் விருப்பத்தில் எந்த தவறும் கிடையாது. அதேபோல் ஆஸ்திரேலியாவில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை அஸ்வின் நன்றாக அறிவார். கடந்த முறையே அதனை நிரூபிக்கவும் செய்துள்ளார்.
ஆனால் இம்முறை பெர்த் டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தருக்கு தான் முதல் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன்பின் பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் அஸ்வினை ரோஹித் சர்மா மற்றும் கம்பீர் இருவரும் வற்புறுத்தியே விளையாட வைத்திருக்கின்றனர். தற்போது காபா டெஸ்டில் ஜடேஜா தேர்வு செய்யப்பட்டதால், மீண்டும் அஸ்வின் மனதளவில் ஓய்வு பெற தயாராகியுள்ளார்.
இருப்பினும், அடுத்த 2 போட்டிகளிலும் தனது தேவை இருக்கிறதா என்று கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கம்பீர் இருவரிடமும் கேட்டு அறிந்து கொண்டுள்ளார். ஏனென்றால் மெல்போர்ன் மற்றும் சிட்னி இரு பிட்ச்களும் ஸ்பின்னர்களுக்கு உதவியாக இருக்கும். அப்போதும் இந்திய அணியின் முதல் நிலை ஸ்பின்னராக ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரையும் திட்டத்தில் வைத்திருந்திருக்கின்றனர்.
இதனால் தனது தேவை இல்லையென்றால், இங்கே இருப்ப விருப்பமில்லை என்று நேரடியாகவே கூறி ஓய்வை அறிவித்துள்ளார். ஏனென்றால் ஒரு டெஸ்ட் தொடரின் பாதியில் ஒரு வீரர் ஓய்வை அறிவிக்கும் போது, அந்த அணிக்கு என்ன சிக்கல் உருவாகும் என்பதை அஸ்வின் நன்றாகவே அறிவார். கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் என்ன நடந்ததோ, அது மீண்டும் நடந்துள்ளது.
அஸ்வினின் திறமைக்கு அவமரியாதை ஏற்பட்டதன் காரணமாகவே உடனடியாக எந்த முன் திட்டமிடலும் இல்லாமல் பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பிவிட்டு, ஓய்வை அறிவித்துள்ளார். அந்த செய்தியாளர் சந்திப்பில் கூட அஸ்வின் பேசும் போது, எனக்குள் இன்னும் அதிக கிரிக்கெட் மிச்சம் இருக்கிறது. அதனை கிளப் அளவில் வெளிப்படுத்துவேன் என்று தெரிவித்தார். இதன் மூலமாக அஸ்வினின் முடிவுக்கு பின் இருக்கும் காரணத்தை அறிந்து கொள்ள முடியும்.