மும்பை: சென்னை அணியின் ஜாம்பவான் வீரரான அஸ்வின் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில், அவருக்கு சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் பொறுப்பு அளிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோல் அஸ்வினின் இந்த ஓய்வு அறிவிப்புக்கு பின், தோனி மற்றும் காசி விஸ்வநாதன் ஆகியோர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் இருந்து சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ளார். ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த அஸ்வின், இனி ஐபிஎல் தொடரிலும் விளையாட மாட்டேன் என்று கூறி இருக்கிறார். ஆனால் உலகின் மற்ற லீக் தொடர்களில் விளையாடுவேன் என்று கூறி இருக்கிறார்.

அண்மைக் காலங்களில் பிசிசிஐ இந்திய வீரர்களை மற்ற லீக் போட்டிகளில் விளையாட அனுமதித்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு கூட தினேஷ் கார்த்திக் எஸ்ஏ20 லீக் தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார். அதேபோல் எம்எல்சி, ஹன்ட்ரட் ஆகிய தொடர்களிலும் ஐபிஎல் உரிமையாளர்கள் முதலீடுகளை செய்திருக்கின்றனர்.
அவர்களின் முதலீடுகளை திரும்பி எடுப்பதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் எஸ்ஏ 20 லீக் தொடரில் பார்ல் ராயல்ஸ் அல்லது ஜேஎஸ்கே ஆகிய இரு அணிகளில் ஒரு அணிக்காக அஸ்வின் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் எம்எல்சி தொடரில் டிஎஸ்கே அணிக்காக அஸ்வின் களமிறங்கக் கூடும்.
ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக தொடங்கிய அஸ்வினின் பயணம், சிஎஸ்கே அணியில் இருந்தவாறே முடிவுக்கு வந்துள்ளது. சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுவதை அஸ்வின் விரும்பவில்லை. அதேபோல் சிஎஸ்கே அணி நிர்வாகமும் அஸ்வினை விடுவதற்கு தயக்கம் காட்டி வந்தது. இறுதியாக தோனி மற்றும் காசி விஸ்வநாதன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி அஸ்வினை சம்மதிக்க வைத்திருக்கலாம்.
ஏனென்றால் இவர்கள் இருவருமே அஸ்வினுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அதேபோல் இவர்கள் இருவரும் கூறினால் மட்டுமே அஸ்வின் கேட்கும் நிலையில் இருப்பவர். அதேபோல் சிஎஸ்கே அணியில் இல்லாவிட்டாலும், அஸ்வின் இனி பவுலிங் கன்சல்டன்ட் அல்லது பவுலிங் பயிற்சியாளராக சிஎஸ்கே அணிக்கு கம்பேக் கொடுக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
ஏனென்றால் டுவைன் பிராவோ ஓய்வை அறிவித்த சில மாதங்களிலேயே உடனடியாக அவர் பவுலிங் பயிற்சியாளராக கொண்டு வரப்பட்டார். பிராவோ அளிக்கப்பட்ட மரியாதையை சிஎஸ்கே அணி நிர்வாகம் அஸ்வினுக்கு அளிக்கும் என்றும் பார்க்கப்படுகிறது. அதேபோல் சிஎஸ்கே அணியின் அகாடமியிலும் அஸ்வின் மிக முக்கியமான பதவிக்கு கொண்டு வரப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.