சென்னை: இந்திய அணியின் துணைக் கேப்டன் பதவியை ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே முயற்சி மேற்கொண்டதாகவும், அதற்கு இந்திய அணியில் போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்றும் தமிழக முன்னாள் வீரர் விவி கிரி தெரிவித்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் ஜாம்பவான் வீரராக வலம் வந்த அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அஸ்வினின் 14 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் அவரின் அடுத்த இன்னிங்ஸ்-க்கு முன்னாள் வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்திய அணிக்காக நீண்ட ஆண்டுகள் விளையாடி வந்த அஸ்வின், கடைசி வரை ஒரு போட்டியில் கூட கேப்டன்சி செய்யவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பாகவே அஸ்வினுக்கு கேப்டன்சி கொடுக்க வேண்டும் என்ற பேச்சுகள் எழுந்த போதும், பிசிசிஐ கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் தமிழக முன்னாள் வீரர் விவி கிரி மைக்கேல் தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில், அதிர்ச்சியான சம்பவம் ஒன்றை கூறியுள்ளார்.
அதில், இந்திய அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே இருந்த போது, அஸ்வினுக்கு துணைக் கேப்டன் பதவியை பெற்று கொடுக்க வேண்டும் என்று சில முயற்சிகளை செய்தார். ஆனால் அனில் கும்ப்ளேவின் முயற்சிக்கு இந்திய அணியில் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. ஒருவேளை துணைக் கேப்டன் பதவியை பெற்றிருந்தால், அஸ்வின் நிச்சயம் இந்திய அணியை சில போட்டிகளிலாவது வழிநடத்தி இருப்பார்.
அஸ்வினை பொறுத்தவரை மனதளவில் மிகவும் கடினமான வீரர். மன்கட் சர்ச்சை வந்த போது இந்திய கிரிக்கெட் அணியில் இருந்த வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும் கூட, அஸ்வின் நேரடியாக விதிகளின் படியே செயல்படுகிறேன் என்று விவாதித்தார். அஸ்வினுக்கு அடுத்தக் கட்ட வாய்ப்புகள் ஏராளமானவை உள்ளது. பயிற்சியாளராக செயல்பட வாய்ப்புகள் உள்ளது.
அதேபோல் அடுத்த 2 போட்டிகளுக்கு அஸ்வின் வர்ணனையாளராக செயல்படவும் வாய்ப்புகள் உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து தினேஷ் கார்த்திக், அபினவ் முகுந்த் ஆகியோரை தொடர்ந்து அஸ்வின் வர்ணனையில் களமிறங்கலாம். அதேபோல் விவாதங்களில் அஸ்வின் அறிவார்ந்த விஷயங்களை பேசக் கூடியவர். அவரின் அறிவாற்றல் எப்போதும் எல்லோரை விடவும் அதிகமாக இருக்கும்.
அஸ்வினை சிறுவயதில் இருந்தே பார்த்து வருகிறேன். 6 வயதில் இருந்த போது அஸ்வினுக்கு காலில் சில பிரச்சனைகள் இருந்தன. நடப்பதற்கே கஷ்டப்பட்டார் என்று சொல்ல வேண்டும். ஆனால் குணப்படுத்தி பேட்ஸ்மேனாக களமிறங்கி ஆச்சரியம் கொடுத்தார். அஸ்வினின் போராட்ட குணமும், புதிய முயற்சிகளும் ஆச்சரியம் அளிக்கும்.
கேரம் பால் போன்ற புதிய முயற்சிகளை அஸ்வினால் எளிதாக சோதித்து பயன்படுத்த முடியும். புதிய பந்தில் அஸ்வின் பவுலிங் செய்வதற்கு கொஞ்சம் கூட பயந்ததில்லை. அதேபோல் பவுலிங் செய்யும் போது கடைசி நொடியில் நிறுத்தி பேட்ஸ்மேனின் நகர்வை கணித்து பவுலிங் செய்யக் கூடியவர். இவற்றை பல்வேறு வீரர்களும் இப்போது பின்பற்றி வருகின்றனர்.
அஸ்வின் இப்போது கூட புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளக் கூடியவர். கிரிக்கெட் மீதான அஸ்வினின் ஆர்வத்தை பார்த்து வியந்து போயுள்ளேன். கிரிக்கெட்டில் தொடக்கம் முதல் முடிவு வரை அனைத்தையும் அஸ்வின் அறிவார். ஹர்பஜன் சிங் இருக்கும் போதே அஸ்வின் இந்திய அணிக்குள் வந்துவிட்டார். அதன்பின் இங்கிலாந்து தொடருக்கு பின் அஸ்வின் முதல்நிலை ஸ்பின்னர் என்ற அந்தஸ்தை பெற்றுவிட்டார்.
இப்போதும் வாஷிங்டன் சுந்தரையும், அஸ்வினையும் ஒப்பிட கூடாது. ஏனென்றால் வாஷிங்டன் சுந்தரை விடவும் அஸ்வின் மிகச்சிறந்த ஸ்பின்னர். அவர் இளம் வீரர் என்பதால், அணி நிர்வாகம் வாஷிங்டன் சுந்தரை சேர்த்திருக்கிறது. என்னை பொறுத்தவரை கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்யும் போது வயதை பார்க்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.