மும்பை: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், விரைவில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக அவரின் நண்பரும், அனலிஸ்டுமான பிரசன்னா பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு அஸ்வினின் ரசிகர்கள் பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவித்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பின்னரே இந்திய அணியின் சீனியர் வீரர்கள் ஒவ்வொருவராக ஓய்வை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரிலேயே அஸ்வின் தொடங்கி வைத்துள்ளார்.

இதனால் கங்குலி, அனில் கும்ப்ளே, விவிஎஸ் லக்ஷ்மண், தோனி உள்ளிட்டோர் வரிசையில் அஸ்வினின் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் போதே ஓய்வை அறிவித்துள்ளார். 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின், இதுவரை 37 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது உட்பட மொத்தமாக 547 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். அனில் கும்ப்ளேவுக்கு பின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் அஸ்வின் தான்.
அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் 62 முறை ஒரு இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது இடத்தை நிரப்புவதற்கு இளம் வீரர் ஒருவர் தயாராகிவிட்ட பின், அவருக்கு வழிவிட்டு அஸ்வின் ஓய்வை அறிவித்திருப்பது ரசிகர்களிடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
இந்த நிலையில் அஸ்வினின் ஓய்வு குறித்து அவரின் நெருங்கிய நண்பரும், தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் அனலிஸ்டுமான பிரசன்னா தனது எக்ஸ் பக்கத்தில், ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் அறிவார்ந்த கிரிக்கெட் வீரருடன் பணியாற்றி, விவாதித்து, சண்டை போடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது பெருமை.
இவ்வளவு தெளிவான கிரிக்கெட் வீரருக்கு இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு அமையாதது மிகவும் துரதிஷ்டமானது. ஆனால் விரைவில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக அஸ்வின் செயல்படுவார் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் 2 சீசன்களில் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் பணியாற்றி இருக்கிறார். அப்போது அஸ்வினுடன் பிரசன்னா பணியாற்றி இருந்தார்.
அதேபோல் அண்மையில் முடிவடைந்த டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் அணியின் கேப்டன் மற்றும் தலைமைப் பயிற்சியாளராக இருந்து அஸ்வின் சாம்பியன் பட்டத்தை வென்றார். ஏற்கனவே அஸ்வின் தனது மனைவி மூலமாக கோச்சிங் அகாடமியை நிர்வகித்து வருகிறார். இதனால் விரைவில் டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் அணியின் பயிற்சியாளராக செயல்பட வாய்ப்புகள் உள்ளது.
அதுமட்டுமல்லாமல் இம்முறை சிஎஸ்கே அணிக்காக விளையாட இருப்பதால், சிஎஸ்கே அணி அஸ்வினை கோச்சிங் குழுவிலும் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இளம் வீரர்களை அடையாளப்படுத்துவதிலும், மைதானங்கள் மற்றும் பிட்ச் குறித்த அஸ்வினின் அறிவு நிச்சயம் ஐபிஎல் அணிகளுக்கு பயன்படும் என்று பார்க்கப்படுகிறது.