பிரிஸ்பேன்: இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வை அறிவித்தார். அவர் ஓய்வை அறிவித்த போது சிரித்து பேசுவது போல காட்டிக் கொண்டாலும் அவரது கண்களில் ஒரு வலியை பார்க்க முடிந்தது.
அஸ்வின் பாதி தொடரில் ஓய்வை அறிவிக்க காரணம் என்ன? அவருக்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சரியாக வாய்ப்பு கொடுக்காததால் தான் அவர் ஓய்வை அறிவித்தாரா? என பல்வேறு விமர்சனங்கள் எழுந்து உள்ளன. இதன் பின்னணி குறித்து பார்க்கலாம்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரில் இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் மூன்றாவது போட்டி நடைபெற்று வந்தது. ஒவ்வொரு போட்டியிலும் ஒரு சுழற் பந்துவீச்சாளர் மட்டுமே பிளேயிங் லெவனில் இடம் பெற வேண்டும் என இந்திய அணி நிர்வாகம் முடிவு எடுத்து இருந்தது.
முதல் போட்டியில் சுழற் பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் வாய்ப்பு பெற்றார். இரண்டாவது போட்டியில் அவர் நீக்கப்பட்டு ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அஸ்வினால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்ற நிலையில் மூன்றாவது போட்டியில் ரவீந்திர ஜடேஜா அணியில் வாய்ப்பு பெற்றார்.
அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 77 ரன்கள் எடுத்தார். இதை அடுத்து ஜடேஜா அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் தான் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து இருக்கிறார்.
அஸ்வினுக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அளிக்கப்பட்ட வாய்ப்பும் அவர் ஓய்வு பெறப் போகிறார் என்பதை அறிந்த பின்னரே அளிக்கப்பட்டது என தற்போது தெரிய வந்துள்ளது. அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் அஸ்வினை பிளேயிங் லெவனில் தேர்வு செய்யப் போவதில்லை என தெரிந்தே தான் இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்து இருக்கிறது.
தான் புறக்கணிக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்தே அஸ்வின் இரண்டாவது போட்டிக்கு முன்பே ஓய்வு பெறும் முடிவை .எடுத்து இருக்கிறார். பின்னர் அவருக்கு ஒரு போட்டியில் மட்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது. பின்னர் மீண்டும் அவர் நீக்கப்பட்டார்.
537 விக்கெட்கள் வீழ்த்திய பின்னும் வெளிநாடுகளில் தன்னை பிளேயிங் லெவனில் சேர்க்கப் போவதில்லை என்பதே அறிந்தே அஸ்வின் ஓய்வு முடிவு எடுத்து இருக்கிறார். இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றால் அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
அந்த இறுதிப் போட்டி இங்கிலாந்து நாட்டில் நடைபெறும். அப்போதும் வெளிநாட்டு டெஸ்ட் என கணக்கு காட்டி தனக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு அளிக்கப்படாது என்பதை உணர்ந்தே அஸ்வின் ஓய்வு முடிவை எடுத்து இருக்கிறார்.