மும்பை : இந்தியாவின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஏழு விக்கெட்கள் எடுத்தார். ஆனால், அதன் பின் நடந்த இரண்டு டெஸ்ட்களில் பெரிய அளவில் விக்கெட்கள் எடுக்கவில்லை.
இதற்கு காரணம், அஸ்வின் தன் பந்துவீச்சு யுக்திகளை பற்றி முதல் டெஸ்டுக்கு பின் அளித்த பேட்டி தான் என கூறப்படுகிறது. அந்த பேட்டியின் போது தன் யுக்திகளை அவர் வெளிப்படுத்தியதால், இங்கிலாந்து அணி அதை பயன்படுத்திக் கொண்டு இருக்கலாம் என கவாஸ்கர், மஞ்ச்ரேக்கர் உள்ளிட்டோர் கூறியுள்ளனர்.
இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வி அடைந்தது. இரண்டாம் போட்டியில் மோசமான முறையில் தோற்ற இந்தியா, முதல் டெஸ்டில் வெற்றிக்கு அருகில் வந்து தோல்வி அடைந்தது. அந்த போட்டியில் அஸ்வின் ஏழு விக்கெட் வீழ்த்தினார். இங்கிலாந்து துவக்க பேட்ஸ்மேன் அலஸ்டர் குக்கை இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் வீழ்த்தினார்.
அவரது அருமையான பந்துவீச்சு குறித்து போட்டி முடிந்தவுடன் பேட்டி எடுத்தார் இயான் வார்ட் என்ற இங்கிலாந்து முன்னாள் வீரர். அந்த பேட்டியின் போது மிக சாமர்த்தியமாக பந்தை அஸ்வின் கையில் கொடுத்து அவர் என்ன யுக்திகளை பயன்படுத்தி இங்கிலாந்தை நிலைகுலைய வைத்தார் என கேள்வி கேட்டார் இயான். அஸ்வின் அப்போது அனைத்து யுக்திகளையும் பற்றி விரிவாக கை அசைவுகளுடன் செய்து காட்டினார்.
அந்த பேட்டியின் காட்சிகளை இங்கிலாந்து அணி நிச்சயம் பயன்படுத்தி இருக்கும் என கவாஸ்கர், மஞ்ச்ரேக்கர் உள்ளிட்டோர் கூறி உள்ளனர். நான்கு டெஸ்ட் போட்டிகள் மீதம் இருந்த நிலையில் அஸ்வின் இது போல தன் ரகசியங்களை வெளிப்படுத்தி இருக்கக் கூடாது. அவர் செய்தது, ஒரு மேஜிக் நிபுணர் தன் ரகசியங்களை மேடையில் சொல்வது போலத் தான் என விமர்சித்துள்ளார் கவாஸ்கர்.
அஸ்வின் இரண்டாவது மற்றும் மூன்றவாது டெஸ்ட் போட்டிகளில் 41 ஓவர்கள் வீசி, ஒரே ஒரு விக்கெட்டை தான் வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.