
ரெக்கார்டு பார்ட்னர்ஷிப்
லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி கடந்த ஆக.12ம் தேதி தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் எடுத்து. இந்தியா தரப்பில் லோகேஷ் ராகுல் 129 ரன்களும், ரோஹித் ஷர்மா 83 ரன்களும் எடுத்தனர். பிறகு, இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 391 ரன்கள் எடுத்து, இந்தியாவை விட 27 ரன்கள் முன்னிலைப் பெற்றது. கேப்டன் ஜோ ரூட், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 180 ரன்கள் குவித்தார். ஆனால், இரண்டாம் இன்னிங்ஸில் இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. எனினும், புஜாராவும், ரஹானேவும் நான்காம் நாள் ஆட்டத்தில் சிறப்பாக கைக் கொடுத்தனர். 206 பந்துகளை சந்தித்த புஜாரா 45 ரன்களும், 146 பந்துகளை சந்தித்த ரஹானே 61 ரன்களும் எடுத்தனர். இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட 4 மணி விளையாடினர். எனினும், அவர்களால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ரிஷப் பண்ட் மற்றும் இஷாந்த் ஷர்மா களத்தில் இருந்தனர். பிறகு கடைசி நாள் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் மற்றும் இஷாந்த் ஷர்மா விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்த போதும், முகமது ஷமி - பும்ரா ஜோடி நம்ப முடியாத வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 9வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 89 ரன்கள் குவித்து புது சாதனை படைத்தது. முகமது ஷமி 56 ரன்களும், பும்ரா 34 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷமி மற்றும் பும்ராவின் அதிகபட்ச ஸ்கோர் இதுவேயாகும். ரிஷப் பண்ட் அவுட்டான உடனேயே, இந்தியாவின் கதை முடிந்தது என்றே அனைவரும் கருதினர். ஆனால், 9வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்து, இந்திய அணி இரண்டாம் இன்னிங்ஸில் 298 ரன்கள் குவிக்க இருவரும் காரணமாக அமைந்தனர். அந்த பிறகு களமிறங்கிய இங்கிலாந்து, 120 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 151 ரன்கள் வித்தியாசத்தில் நம்ப முடியாத வெற்றியை பதிவு செய்து, தொடரில் 1 - 0 முன்னிலை பெற்றது கோலி ஆர்மி

மாறிய ஆட்டம்
ஷமி - பும்ரா பார்ட்னர்ஷிப்புக்கு முக்கிய காரணம், ஒரேயொரு சம்பவம் தான். இங்கிலாந்து அணியினர் ஒட்டுமொத்தமாக பும்ராவை கார்னர் செய்தது தான். பும்ராவுக்கு அதிக பவுன்சர்களை போட்டு தாக்கினர். அவர்கள் இப்படி பும்ராவை கட்டம் கட்டியதற்கு முக்கிய காரணம், இங்கிலாந்து பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, ஜேம்ஸ் ஆண்டர்சனை குறி வைத்து ஒரு ஓவர் முழுக்க பவுன்ஸ் பந்துகளாக வீசினார். இதில், ஆண்டர்சனுக்கு தோள்பட்டையில் தொடர்ந்து அடி விழுந்தது. இதனால், கடுப்பான ஆண்டர்சன், களத்திலேயே தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். பும்ராவிடம் வார்த்தைகள் மூலம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். பதிலுக்கு இந்திய கேப்டன் விராட் கோலியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த மோதல், இந்திய அணி 2ம் இன்னிங்ஸில் பேட்டிங் செய்யயத் தொடங்கியதில் இருந்து மீண்டும் நீடித்தது. கோலி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, ஆண்டர்சன் நக்கலாக சில வார்த்தைகளை விட, சூடான கோலி, "பும்ராவை போன்று என்னையும் திட்டலாம் என்று பார்க்கிறீர்களா?.. இது ஒன்னும் உன் வீட்டின் கொல்லைப் புறம் கிடையாது, ஜாலியாக இருக்க" என்று பதிலடி கொடுத்தார். அதன் பிறகு, பும்ரா களமிறங்கிய போது, இங்கிலாந்து ரொம்பவே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஒரு பேட்ஸ்மேனுக்கு ஃபீல்ட் செட் செய்வதை விட, பும்ராவுக்கு கடுமையான ஃபீல்ட் செட் செய்தனர். பவுன்சர் பந்துகளை தொடர்ந்து வீசினர். விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் தொடர்ந்து ஸ்லெட்ஜிங் செய்து கொண்டே இருந்தார். பிறகு, மார்க் வுட் வீசிய பந்து, பும்ராவின் ஹெல்மெட்டை மிக பலமாக தாக்கியது. இந்த பந்து ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. ஜேம்ஸ் ஆண்டர்சன் எனும் ஒரு வீரருக்காக ஒட்டுமொத்த இங்கிலாந்து அணியும் பும்ராவை டார்கெட் செய்தனர்.

மிகச்சிறந்த டெஸ்ட் மேட்ச்
இந்த கோபம் தான் பும்ராவையும் - ஷமியையும் மிக நேர்த்தியாக விளையாட வைத்தது. இங்கிலாந்து வைக்க நினைக்க பொறியில் அவர்களே சிக்கி போட்டியை இழந்தனர். இங்கிலாந்து பயிற்சியாளர் க்றிஸ் சில்வர்வூட், லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி குறித்து கூறுகையில், "அந்த சாதாரண சண்டையை நினைத்து நாங்கள் பயப்படவில்லை. அவர்கள் எங்களை சீண்டினார்கள். நாங்கள் திருப்பிக் கொடுக்க நினைத்தோம். அவ்வளவுதான். என்னை பொறுத்தவரை இந்த மோதல், ஒரு மிகச் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை உருவாக்கிவிட்டது. எனினும், போட்டி முடிவை பொறுத்தவரை நாங்கள் ஏமாற்றமடைகிறோம், ஆனால் இது என்ன அட்டகாசமான டெஸ்ட் போட்டி! போட்டியில் அனல் பறந்தது. தங்கள் நாட்டுக்காக விளையாடும் இரண்டு அணிகளும் அந்த போட்டியை நினைத்து பெருமை பட்டுக்கொள்ளலாம். அந்த போட்டியை நான் ரசித்து அனுபவித்தேன்" என்று சொல்லு சமாளித்தார்.

நடந்தது என்ன?
இந்த நிலையில், பும்ரா - ஆண்டர்சன் மோதலின் போது உண்மையில் என்ன நடந்தது என்பதை ரவிச்சந்திரன் அஷ்வின் தனது யூடியூப் சேனலில் அம்பலப்படுத்தியுள்ளார். முதல் இன்னிங்சில ஆண்டர்சனுக்கு பும்ரா வீசிக் கொண்டிருந்த போது ஆண்டர்சன் பும்ராவிடம், "நீ ஏன் இவ்வளவு வேகமாக எனக்கு பந்துவீசுகிறாய்? நான் அணைக்கு இப்படித் தான் வேகமாக வீசினேனா? இத்தனை நேரம், நீங்கள் 80 m/h வேகத்தில் பந்துவீசிக் கொண்டிருந்தாய். திடீரென்று என்னைப் பார்த்ததும், ஏன் 90 m/h இல் பந்துவீசுகிறாய்?" என்று ஆண்டர்சன் கேட்டதாக அஷ்வின் தெரிவித்துள்ள்ளார்.

அஷ்வின் ஷாக்
மேலும் அவர் கூறுகையில். "எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது என்ன வகையான கேள்வி? நான் ஒப்புக்கொள்கிறேன், பும்ராவின் வேகமான பந்துகளால் அவர் அதிர்ந்து போயிருக்கலாம். ஹெல்மெட்டில் அடிபடுவது நிச்சயமாக எளிதல்ல. நான் அவருக்காக பரிதாபம் கொள்கிறேன். ஆனால் அதற்காக ஆண்டர்சன் "நான் உனக்கு வீசினேனா? எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு வீசுகிறாய்?' என்று இப்படி கேட்பார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆண்டர்சன் சம்பவத்தை இங்கிலாந்து தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டது. ஆனால், இறுதியில் ஏற்பட்ட முடிவு அசாதாரணமானது" என்று அஷ்வின் முடித்தார்.


Click it and Unblock the Notifications











