மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் தென்னாபிரிக்க வீரர் டிவால்ட் பிரவீசை சிஎஸ்கே அணி கூடுதல் விலை கொடுத்து தான் தொடரின் பாதியில் வாங்கியதாக தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். குட்டி ஏபி டிவில்லியர்ஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் பிரவீஸ் ஐபிஎல் மெகா ஏலத்தில் தனது அடிப்படை விலையாக 75 லட்சம் ரூபாய் தான் வைத்திருந்தார்.
ஆனால் அவரை எந்த ஒரு அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. இந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக வெளியேறிய நிலையில், அவருக்கு மாற்று வீரராக சிஎஸ்கே அணி பிரவீசை தேர்வு செய்தது.

இந்த நிலையில் சிஎஸ்கே அணி அவரை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து அஸ்வின் தற்போது பேசி இருக்கிறார். அதில் அவர்தான் அடுத்த டிவில்லியர்சா? இல்லை முதல் பிரவீசா என்று எனக்கு தெரியாது. ஆனால் சிஎஸ்கே அணியில் அவருக்கு மிகச் சிறந்த போட்டிகள் அமைந்தது. கடந்த ஆண்டு அவர் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.
சிஎஸ்கே பேசிய அதே சமயத்தில் இரண்டு அல்லது மூன்று அணிகள் அவருடன் பேசியதாக நான் அறிந்தேன். ஆனால் மற்ற அணிகள் பிரவீஸ்க்கு கூடுதல் பணம் கொடுக்க முன்வரவில்லை. தொடரின் பாதியில் ஒரு வீரரின் சேவையை பெற வேண்டும் என்றால் முதலில் அந்த வீரரின் ஏஜென்ட் உடன் நாம் பேச வேண்டும்.
அப்படி பேசும் போது அந்த ஏஜென்ட் கூடுதல் தொகையை கேட்பார். அப்படி கூடுதல் தொகையை கொடுத்து தான் சிஎஸ்கே அணி பிரவீசை வாங்கியது என்று அஸ்வின் கூறியுள்ளார். பிரவீஸ் ஏற்கனவே 2022 மற்றும் 2024 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பத்து ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி இருந்தார்.ஆனால் அதில் அவர் சோபிக்கவில்லை.
இந்த நிலையில் சிஎஸ்கே அணி அவரை இரண்டு கோடியே 20 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியது. அதன் பிறகு சிஎஸ்கே அணிக்கு வந்த அவர் 6 போட்டிகளில் 225 ரன்கள் அடித்தார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 180 ஆக இருந்தது. தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 41 பந்துகளில் பிரவீஸ் சதம் அடித்துள்ளார். இதனால் அவருடைய புகழ் மேலும் அதிகரித்து இருக்கின்றது. இதனைக் குறிப்பிட்டுள்ள டிவில்லியர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது என்று பாராட்டியுள்ளார்.