மும்பை : கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டார் ஆக விளங்கும் மகேந்திர சிங் தோனிக்கு ஜூலை ஏழாம் தேதி பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதற்காக நேற்று மாலையிலிருந்து கிரிக்கெட் ரசிகர்கள் தோனிக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
மேலும் சச்சின், சேவாக் என பிரபல கிரிக்கெட் வீரர்கள் பலரும் தோனிக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் சரியாக மாலை 7.05 மணிக்கு தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்.

வெறும் வாழ்த்துடன் நிறுத்திக் கொள்ளாமல் தோனி ரசிகர்களை வம்பிழுக்கும் வகையில் அவர் கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். இதற்கு காரணம் அஸ்வின் சிஎஸ்கே அணியில் இருந்தும் இந்திய ஒரு நாள் அணியில் இருந்தும் நீக்கப்பட்டதற்கு தோனி தான் காரணம் என்று ஒரு விமர்சனம் இருந்தது. தோனியால் வளர்க்கப்பட்ட அஸ்வின் விராட் கோலி கேப்டன் ஆனதும் அவரை புகழ்ந்து பல பேட்டிகளை கூறியிருந்தார்.
இது தோனி ரசிகர்களை ஆத்திரத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதனால் பலமுறை அஸ்வினை தோனி ரசிகர்கள் விமர்சித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் தனது வாழ்த்து செய்தியில் ஜூலை 7ஆம் தேதி சிறந்த மனிதருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றால் மிகப்பெரிய பிரச்சனை வெடிக்கும். இதனால் நான் வாழ்த்து செய்தி தெரிவித்து விடுகிறேன்.
இதே போல் ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் மற்றவர்களுக்கு வாழ்த்து சொல்வது இதுதான் கடைசியாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால் இனி நேரடியாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தொலைபேசியின் மூலம் வாழ்த்துக்களை தெரிவிக்க இருக்கின்றேன்.
எனவே தோனிக்கு பிறந்த நாளில் இவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை. அவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இவர்கள் இருவருக்கும் பிரச்சனை என்று கதைகளை கட்டிவிடும் நபர்களுக்கும், வதந்தியை பரப்பும் நபர்களுக்கும் இதன் மூலம் எனது முடிவை நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அஸ்வின் கூறியுள்ளார்.