இந்தூர்: நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சனுக்கு நேரம் சரியில்லை. அடுத்தடுத்து நான்கு இன்னிங்ஸ்களில் அஸ்வினிடம் தனது விக்கெட்டை பறி கொடுத்து பரிதாபமாக காட்சி தருகிறார்.
கிரி்க்கெட் உலகின் அதி முக்கிய வீரர்களையெல்லாம் இப்போது அனாசயமாக மண்ணைக் கவ்வ வைத்து வருகிறார் அஸ்வின். அவரிடம் சிக்கி ஏபி டிவில்லியர்ஸ் திணறியுள்ளார். இப்போது கனே வில்லியம்சன் முறை போலும். இந்தியத் தொடரில் அவர் அஸ்வினுக்கு எதிராக திணறித் திண்டாடி வருகிறார்.

3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2வது டெஸ்ட்டில் மட்டும் வில்லியம்சன் ஆடவில்லை. முதல் மற்றும் 3வது டெஸ்ட் போட்டிகளில் அவர் ஆடினார். இதில் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அவர் 75 ரன்களை எடுத்தார். அஸ்வின் பந்தில் போல்டு ஆகி ஆட்டமிழந்தார்.
அடுத்து 2வது இன்னிங்ஸில் 25 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். இந்த இன்னிங்ஸிலும் அவர் அஸ்வின் பந்து வீச்சில் திணறிப் போய் விட்டார்.
அடுத்து தற்போது 3வது டெஸ்ட்டில் ரொம்பவே திணறி விட்டார் வில்லியம்சன். முதல் இன்னிங்ஸில் வெறும் 27 ரன்களை மட்டுமே எடுத்த அவர் எல்பிடபிள்யூ ஆகி ஆட்டமிழந்தார். தற்போது 2வது இன்னிங்ஸில் 25 பந்துகளைச் சந்தித்த அவர் வெறும் 8 ரன்களில் அஸ்வின் பந்தில் போல்டு ஆகி விட்டார்.
இந்தத் தொடரில் மற்ற எவரையும் விட கனே வில்லியம்சன்தான் அஸ்வினிடம் ரொம்பத் திணறிப் போய் விட்டார் என்பது முக்கியமானது.
உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்கள் அஸ்வினிடம் தொடர்ச்சியாக வீழ்வது, கவாஸ்கர் சொன்னது போல அவர் ஒரு லெஜன்டரி பவுலராக மாறி வருவதையே காட்டுகிறது என்பதில் சந்தேகம் இல்லை.