மும்பை : உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட உள்ள நிலையில் சமூக வலைத்தளத்தில் திடீரென்று அஷ்வின் ட்ரெண்டாகி வருகிறார். பந்துவீச்சில் எப்போதும் கில்லி போல் செயல்படும் அஸ்வின் தற்போது பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடி வருகிறார்.
ஏற்கனவே உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அஸ்வின் பிளேயிங் லெவனின் சேர்க்கப்படாமல் போனது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திய அணியின் பேட்டிங் தற்போது தடுமாறி வருகிறது.

கீழ் வரிசையில் பேட்டிங் தெரிந்த ஒருவர் அணியில் இருந்தால் அது நிச்சயம் நல்ல பலனை கொடுக்கும் என ரசிகர்களும் நம்புகின்றனர். மேலும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது இந்தியாவில் நடைபெறுகிறது. மேலும் எதிரணிகளில் பல இடதுகை பேட்ஸ்மேன்கள் இருக்கும்போது அஸ்வின் பிளேயிங் லெவனில் இருந்தால் அவர் நிச்சயம் பட்டையைக் கிளப்புவார் என்பது கிரிக்கெட் விமர்சகர்களின் நம்பிக்கையாகும்.
இதனால் அஸ்வினை உலகக்கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக கிரிக்கெட் வர்ணனையாளர் நாணி வெளியிட்டுள்ள பதிவில் அஸ்வின் ஏன் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்று காரணத்தை பட்டியலிட்டு இருக்கிறார். அதில் அஸ்வின் இடது கை பேட்ஸ்மேனுக்கு எதிராக சிறப்பாக செயல்படக் கூடியவர் என்றும் அனைத்து அணிகளிலும் மூன்று அல்லது நான்கு இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் அஸ்வின் விளையாடுவது முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஜடேஜா மற்றும் குல்தீப் ஏற்கனவே அணியில் இருக்கும் நிலையில் அக்சர் பட்டேல் மூன்றாவதாக எதற்கு என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதில் அக்சரும், ஜடேஜாவும் இடது கை சுழற் பந்துவீச்சாளர்கள் என்பது கவனிக்கத்தக்கது. மேலும் அஸ்வின் பவர் பிளேவிலும் பந்து வீசக்கூடிய திறமை உடையவர் என்றும் நாணி தெரிவித்துள்ளார்.
இதைப் போன்று அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் 5 சதங்கள் அடித்திருக்கிறார் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள நாணி, அஸ்வின் விளையாடிய போது இந்திய அணி 2011 உலகக்கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதாக கூறியுள்ளார். நாணி தேர்வு செய்துள்ள அணியில், ரோகித் சர்மா, கில், இஷான் கிஷன், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா, குல்தீப் யாதவ் ,முஹமது சமி, பும்ரா, அஸ்வின், சிராஜ், சர்துல் தாக்கூர் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.