
இணையும் வீரர்கள்
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி டிரன்ட்பிரட்ஜ் நகரில் தொடங்கவுள்ளது. அதற்கு முன்பாக இந்திய அணி எந்த பயிற்சி ஆட்டத்திலும் விளையாடவில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தோல்வி அடைந்த பிறகு, இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்தை சுற்றிப் பார்த்து பொழுது கழித்தனர். விரைவில், இங்கிலாந்து தொடருக்கான பயோ-பபுளில் இந்திய வீரர்கள் இணைய உள்ளனர்.

ஃபார்மை மெருகூட்ட
எனினும், நம்ம ரவிச்சந்திரன் அஷ்வின் இந்த இடைப்பட்ட காலத்தில் கவுண்ட்டி அணியான சர்ரே அணிக்காக விளையாட முடிவு செய்தார். இதன் மூலம் தனது ஃபார்மை மேலும் மெருகூட்ட முடியும் என்று நம்பினார். குறிப்பாக, இங்கிலாந்து கவுண்டி போட்டிகளில் விளையாடுவதன் மூலம், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பிறகு, அஸ்வினுக்கு உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடுவதற்கான விசா உறுதியான நிலையில், சர்ரே - சோமர்செட் அணிகளுக்கு இடையே நேற்று (ஜுலை.11) தொடங்கிய ஆட்டத்தில் அஷ்வின் சர்ரே அணிக்காக களமிறங்கினார்.

அஷ்வின் சாதனை
இதில், இன்னொரு ஆச்சர்யம் மிக்க செய்தி என்னவெனில், சர்ரே அணிக்கான முதல் ஓவரை அஷ்வின் தான் வீசினார். இதன் மூலம், 11 ஆண்டுகள் கழித்து, இங்கிலாந்து கவுண்டி போட்டி ஒன்றின் முதல் ஓவரை வீசிய சுழற்பந்துவீச்சாளர் எனும் சாதனையை அஷ்வின் படைத்தார். இதற்கு முன் கடந்த 2010ல் போட்டியின் முதல் ஓவரை ஸ்பின்னர் ஜீதன் படேல் வீசியிருந்தார். அதன் பிறகு, 11 ஆண்டுகளுக்கு பிறகு அஷ்வின் தற்போது இந்த சாதனையை படைத்திருக்கிறார்.
தகர்த்த அஷ்வின்
அது மட்டுமின்றி, அஷ்வினின் முதல் ஸ்பெல்லில் விக்கெட்டுகள் ஏதும் விழவில்லை. ஆனால், அதன் பிறகு 40வது ஓவரில் மீண்டும் பந்துவீச வந்த அஷ்வின், இம்முறை பேட்ஸ்மேன்களுக்கு கடும் அச்சுறுத்தலாக இருந்தார். அப்போது சோமர்செட் அணியின் கேப்டன் ஜேம்ஸ் ஹில்ட்ரெத் மற்றும் லம்மோன்பி ஆகியோர் 106 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்க, இந்த இணையை பிரித்து, சர்ரே அணிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை அஷ்வின் ஏற்படுத்திக் கொடுத்தார். 42 ரன்கள் எடுத்து நங்கூரம் போட்டுக் கொண்டிருந்த லம்மோன்பியின் ஸ்டெம்ப்புகளை அஷ்வின் காலி செய்தார். இந்த வீடியோவை சர்ரே அணி வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications