சென்னை: உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சிக்காக அஸ்வின் ஜெராக்ஸான மகேஷ் பத்தியாவை ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் அழைத்த நிலையில், அந்த அணியின் அழைப்பை நிராகரித்துள்ளதாக மகேஷ் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கடைசி நேரத்தில் அக்சர் படேல் நீக்கப்பட்டு ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டார். இதன் மூலம் 3 வகையான ஸ்பின்னர்களையும் கொண்ட இந்திய அணியின் பலம் இன்னும் அதிகரித்தது. அதேபோல் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இந்தியா களமிறங்கவுள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் அஸ்வினின் ஆற்றல் இன்னும் கூடுதலாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் சேப்பாக்கம் பிட்சும் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், ஆஸ்திரேலிய அணியை எளிதாக இந்திய அணியால் வீழ்த்த முடியும் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அஸ்வினை சமாளிக்க ஆஸ்திரேலியா அணி புதிய முயற்சியை கையில் எடுத்தது.
அதாவது பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் போது அஸ்வினை சமாளிப்பதற்காக, அஸ்வினை போலவே பந்துவீசும் திறமை கொண்ட பரோடாவைச் சேர்ந்த இளம் வீரர் மகேஷ் பித்தியாவை வலைபயிற்சி பந்துவீச்சாளராக கொண்டு வந்தது. அவரை வைத்து ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித், லபுஷேன், வார்னர் உள்ளிட்டோர் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டனர்.
அதற்கு ஓரளவு பலம் கிடைத்தது என்றே சொல்லலாம். இந்த நிலையில் மீண்டும் உலகக்கோப்பை தொடரில் ஆஃப் ஸ்பின்னருக்கு எதிராக பயிற்சி மேற்கொள்ள மீண்டும் மகேஷ் பத்தியாவை அணுகியுள்ளது ஆஸ்திரேலிய அணி நிர்வாகம். ஆஸ்திரேலிய அணியில் உள்ள பிரிதேஷ் ஜோஷியை கொண்டு மீண்டும் மகேஷ் பத்தியாவை அக்.4ஆம் தேதி சென்னை வருமாறு அழைத்துள்ளது.
ஆனால் ஆஸ்திரேலியா அணி நிர்வாகத்தின் அழைப்பை நிராகரித்துள்ள இளம் வீரர் மகேஷ். ஆஸ்திரேலிய அணியின் அழைப்பு குறித்து பரோடா அணியின் பயிற்சியாளர் அரவிந்த் உடன் ஆலோசனை செய்துள்ளார் மகேஷ். அப்போது உள்ளூர் கிரிக்கெட் சீசன் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கவுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் இளம் வீரர் மகேஷ் பத்தியா ஆஸ்திரேலிய அணியின் அழைப்பை நிராகரித்துள்ளார். இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.