இந்திய அணியில் மாற்றம்
இந்திய அணியில் பல வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. கேப்டன் ரோஹித் சர்மா, ஷிகர் தவான், புவனேஸ்வர் குமார், பும்ரா, சாஹல் உள்ளிட்டோர் வெளியே அமர வைக்கப்பட்டு, அணிக்குள் ராகுல், மனிஷ் பாண்டே, தீபக் சாஹர், கலீல் அஹ்மது, சித்தார்த் கவுல் ஆகியோர் இடம் பிடித்தனர். இதில் தீபக் சாஹருக்கு இது தான் முதல் ஒருநாள் போட்டி.
கேப்டன் தோனியின் 200வது போட்டி
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஓய்வில் இருக்கும் நிலையில், தோனி சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின் கேப்டன் பதவியை ஏற்றார். மேலும், இது கேப்டனாக தோனியின் 200வது ஒருநாள் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் முக்கிய வீரர்கள் ஓய்வில் இருக்க, கேப்டன் தோனி என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பில் ஆட்டம் துவங்கியது.
ஆப்கன் அசத்தல் பேட்டிங்
டாஸ் வென்ற ஆப்கன் முதலில் பேட்டிங் தேர்வு செய்து ஆடியது. அந்த அணியின் துவக்க வீரர் முகம்மது ஷாசாத் அருமையாக ஆடி சதம் அடித்தார். அடுத்து நபி அரைசதம் அடித்தார். மற்ற வீரர்கள் ரன் குவிக்க தடுமாறி, தங்கள் விக்கெட்டை இழந்தனர். சதம் அடித்த ஷாசாத் 124 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 11 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் விளாசினார். இந்தியா விக்கெட்கள் வீழ்த்தினாலும், ரன்களை கட்டுப்படுத்துவதில் தடுமாறியது. ஆப்கன் அணி 50 ஓவர்களில் 252 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் இழந்து இருந்தது. இந்தியா சார்பில் ஜடேஜா 3 விக்கெட்கள், குல்தீப் 2 விக்கெட்கள், தீபக் சாஹர், கலீல் அஹ்மது, கேதார் ஜாதவ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்தியாவுக்கு 253 ரன்கள் இலக்கு
253 ரன்கள் இலக்கை நோக்கி ஆடத் துவங்கிய இந்திய அணிக்கு ராகுல், அம்பதி ராயுடு முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்து அசத்தல் துவக்கம் அளித்தனர். ராயுடு அதிரடியாக ஆடி 4 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் அடித்து, 57 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ராகுல் 60 ரன்களில் ரஷித் கான் பந்தில் வெளியேறினார். தோனி, தினேஷ் கார்த்திக் இருவரும் அம்பயர் கொடுத்த தவறான LBW முடிவால் வெளியேறினர். இருந்த ஒரே ரிவ்யூவை ராகுல் பயன்படுத்தி விட்டதால் இவர்களுக்கு ரிவ்யூ செய்யும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. மனிஷ் பாண்டே 8, ஜாதவ் 19 ரன்களிலும், தீபக் சாஹர் 12, கவுல் 0, குல்தீப் 9 ரன்களிலும் வெளியேற இந்தியா தடுமாறியது. ஆப்கன் அணி பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தியது.