தவான், ரோஹித் சதம்.. பாகிஸ்தானை தெறிக்க விட்ட இந்தியா.. 2வது ஆசிய கோப்பை வெற்றி
Recommended Video

துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று முக்கியமான சூப்பர் 4 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்தியா இந்த ஆசிய கோப்பையில் பங்கேற்ற நான்கு போட்டிகளிலும் வென்று வெற்றி நடை போட்டு வருகிறது. பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. ஒரே தொடரில் இரண்டு முறை பாகிஸ்தானை வென்று அசத்தியுள்ளது இந்தியா.
இந்த போட்டியில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்கான தன் இடத்தை கிட்டதட்ட உறுதி செய்யும் என்ற நிலையில், இந்தியா தன் இறுதிப் போட்டிக்கான இடத்தை வலுப்படுத்தியுள்ளது.

என்ன மாற்றம்
இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இடம் பெற்ற அதே வீரர்களோடு இந்திய அணி களம் இறங்கியது. பாகிஸ்தான் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டது. ஹாரிஸ் மற்றும் உஸ்மான் சென்வாரி நீக்கப்பட்டு முஹம்மது ஆமிர் மற்றும் ஷதாப் கான் அணியில் சேர்க்கப்பட்டனர்.

பாகிஸ்தான் துவக்கம் சரியில்லை
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்கத்தில் இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் துவக்க வீரர்கள், இமாம் உல் ஹக் 10, பாக்கர் சமான் 31 ரன்களில் வெளியேறினர். அடுத்து பாபர் ஆசாம் 9 ரன்களில் ரன் அவுட் ஆனார்.

பாகிஸ்தான் 237 ரன்கள்
அடுத்து ஜோடி சேர்ந்த பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ், அனுபவ ஷோயப் மாலிக் இணைந்து 107 ரன்களுக்கு கூட்டணி அமைத்து ரன்கள் சேர்த்தனர். அதிக ரன்கள் அடிக்க முற்பட்டு, 39வது ஓவர் முதல் அந்த அணி மீண்டும் விக்கெட்களை இழக்கத் துவங்கியது. சர்ப்ராஸ் 44, மாலிக் 78, ஆசிப் அலி 30, ஷதாப் கான் 10 தொடர்ந்த இடைவெளியில் வெளியேறினர். பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் பும்ரா, சாஹல், குல்தீப் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

இந்தியாவிற்கு 238 இலக்கு
238 ரன்கள் இலக்கை நோக்கி தன் பேட்டிங்கை துவங்கியது இந்தியா. தவான், ரோஹித் இருவரும், முதல் விக்கெட்டுக்கு 210 ரன்கள் சேர்த்து கலக்கினர். தவான் சதம் அடித்து தெறிக்க விட்டார். எனினும், அடுத்த சில நிமிடங்களில் 114 ரன்கள் எடுத்த நிலையில், ரன் அவுட் ஆனார் தவான். ரோஹித் அடுத்து சதம் அடித்தார். மேலும், ஒருநாள் போட்டிகளில் 7000 ரன்களை கடந்து புதிய சாதனை செய்தார் ரோஹித். பந்துவீச்சில் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாத பாகிஸ்தான் அணி, கடும் அழுத்தத்தில் இருந்தது. ரோஹித் கொடுத்த இரண்டு கேட்ச்களை கோட்டை விட்டனர் பாகிஸ்தான் வீரர்கள். 39.3 ஓவர்களில் இந்தியா வெற்றிக்கு தேவையான 238 ரன்களை எட்டியது. ரோஹித் 111, ராயுடு 12 ரன்களோடு இருந்தனர். இந்தியா 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பெற்றது.


Click it and Unblock the Notifications