தெரியாம பேட்டிங் எடுத்துட்டோமோ
டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். அந்த அணி 12 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்து, "தெரியாம பேட்டிங் எடுத்துட்டோமோ" என்பது போல தவித்து வந்தது.
அணியை மீட்ட ஜோடி
அப்போது ஜோடி சேர்ந்த முஷ்பிகுர் ரஹீம், முஹம்மத் மிதுன், இணைந்து அணியை மீட்டனர். அவர்கள் நான்காவது விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்க்க வங்கதேசம் ஓரளவு சரிவில் இருந்து மீண்டது. 60 ரன்கள் அடித்த மிதுன் வெளியேற, அடுத்த சில ஓவர்களில் ரஹீம் 99 ரன்களுக்கு ஆட்டமிழந்து, "வட போச்சே" என 1 ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அடுத்து மக்மதுல்லா 25 ரன்கள் அடித்தது மட்டுமே ஓரளவு நல்ல ரன். மற்ற வீரர்கள் வருவதும், போவதுமாக இருக்க வங்கதேசம் 48.5 ஓவர்களுக்கு 239 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பாகிஸ்தான் பந்துவீச்சில் ஜுனைத் கான் 4 விக்கெட்கள் எடுத்து கலக்கினார்.
திருப்பு முனை கேட்ச்
அடுத்து பாகிஸ்தான் 240 ரன்கள் இலக்கை நோக்கி ஆடியது. இந்த அணியும் முதல் 3 விக்கெட்களை 18 ரன்கள் எடுப்பதற்குள் இழந்தது. அடுத்து ஷோயப் மாலிக், துவக்க வீரர் இமாம் உல் ஹக் இணைந்து அணியை மீட்கும் வேலையை செய்தனர். இவர்கள் இணைந்து 67 ரன்கள் எடுத்தனர். அப்போது ஷோயப் மாலிக் 30 ரன்கள் இருந்த போது, மொர்டசா பிடித்த அருமையான கேட்ச் மூலம் வெளியேறினார். இது தான் ஆட்டத்தில் திருப்பு முனையாக அமைந்தது. அடுத்து வந்த வீரர்களில் ஆசிப் அலி மட்டுமே 31 ரன்கள் எடுத்தார். ஆசிப் அலி 31 மற்றும் இமாம் 83 ரன்களில் வெளியேற பாகிஸ்தான் 40.5 ஓவர்களில் 167 ரன்களுக்கு 7 விக்கெட்கள் இழந்து தவித்தது.
வங்கதேசம் அசத்தல் வெற்றி
அடுத்து வந்த பின்வரிசை பேட்ஸ்மேன்கள் கடைசி 9 ஓவர்களில் 70 ரன்களுக்கும் மேல் எடுக்க வேண்டிய சூழ்நிலையில், அவர்களால் ரன் குவிக்க முடியவில்லை. பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 202 ரன்கள் எடுத்து 9 விக்கெட் இழந்து இருந்தது. முஸ்டாபிசூர் ரஹ்மான் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். வங்கதேசம் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தி உள்ளது. நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இந்திய அணியை சந்திக்க உள்ளது வங்கதேசம்.