யுஏஇ : 14ஆவது ஆசிய கோப்பை போட்டிகள் நாளை தொடங்கவிருக்கின்றன. இந்த தொடரில் இந்தியா,பாகிஸ்தான்,இலங்கை,ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன.
நாளை நடைபெறும் முதலாவது போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவிருக்கின்றன. அந்த போட்டி குறித்த ஒரு அலசல் இதோ.

போட்டி நடைபெறும் துபாய் இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னதாக இரண்டு அணிகளும் வெவ்வேறு அணிகளுக்கெதிராக தலா 5 முறை இந்த மைதானத்தில் விளையாடியுள்ளன. அதில் இலங்கை இரண்டு முறை வென்றுள்ளது. பங்களாதேஷ் இந்த மைதானத்தில் இதுவரை ஒரு வெற்றி கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ் அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக ஒருநாள் தொடரை வென்றுள்ளது. அது அந்த அணிக்கு மனதளவில் பெரும் நம்பிக்கையை அளிக்கும். மேலும் அந்த அணியின் தமீம் இக்பால்,முஷபிகுர் ரஹீம்,சாகிப் அல் ஹசன்,மஹ்மதுல்லா மற்றும் முஸ்தாபிஸுர் ரஹ்மான் ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர். ஆசிய கோப்பை போட்டியை வெற்றியுடன் தொடங்க பங்களாதேஷ் அணி முழுவீச்சில் முயற்சி செய்யும்.
இலங்கை அணியை பொறுத்தவரை காயத்தால் அந்த அணி பின்னடைவுக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆனாலும் அந்த அணியின் மூத்த வீரர்கள் ஏஞ்சலோ மேத்யூஸ்,உப்புல் தரங்கா,குசால் மெண்டிஸ் மற்றும் குசால் பெரேரா ஆகியோர் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம். நீண்ட இடைவெளிக்கு பிறகு களமிறங்கும் மலிங்கா மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இலங்கை அணி கடைசியாக விளையாடிய 37 போட்டிகளில் 10 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது.
இரண்டு அணிகளும் வெற்றியுடன் தொடரை தொடங்க சிறப்பாக போராடும் என்பதில் மாற்று கருத்தே இல்லை..