இந்தியா இறுதியில்
இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி குரூப் சுற்றில் ஹாங்காங், பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தியது. பின்னர் சூப்பர் 4 சுற்றில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக அதிக ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகளில் வென்று சூப்பர் 4 சுற்றில் 4 புள்ளிகள் பெற்று இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. ஆப்கன் அணி தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது. இதனால், இந்தியா இன்னும் ஒரு சூப்பர் 4 போட்டி மீதமிருக்கும் நிலையில், இறுதிக்கு முன்னேறியுள்ளது.
ஆப்கன் போராட்டம் வீண்
ஆப்கன் இந்த தொடரில் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனினும், முதல் சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் கடைசி ஓவரில் வெற்றியை பறிகொடுத்தது. அதே போல, இரண்டாவது சூப்பர் 4 போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக கடைசி பந்தில் வெற்றியை பறிகொடுத்தது. இதனால், இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்துள்ளது.
இறுதிப் போட்டியில் யார்?
இந்தியா இறுதிக்கு முன்னேறிய நிலையில், வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முனைப்பில் இருக்கின்றனர். நாளை நடக்க உள்ள போட்டியில் இரண்டு அணிகளும் மோத உள்ளன. அதில் வெற்றி பெறும் அணி இறுதிக்கு தகுதி பெறும். எனவே, விறுவிறுப்பான போட்டியை நாளை எதிர்பார்க்கலாம்.
3வது இந்தியா பாகிஸ்தான் மோதல்?
இந்தியா, பாகிஸ்தான் இந்த தொடரில் இரண்டு முறை சந்தித்துள்ள நிலையில், மீண்டும் இறுதியில் ஒரு முறை சந்திக்குமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்த தொடர் தொடங்கும் முன்பு இருந்தே இந்தியா, பாகிஸ்தான் அணிகள் தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என கூறப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு போட்டிகளில் இந்தியா, எளிதாக பாகிஸ்தானை வீழ்த்தியதால், 3வது சந்திப்பு பரபரப்பாக இருக்குமா? என்ற சந்தேகமும் உள்ளது.