ஹாங்காங் முதல் பேட்டிங்
ஹாங்காங் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ஹாங்காங் அணியின் துவக்க வீரர்கள் நிசாகத் கான் மற்றும் அன்ஷுமன் ராத் நிதானமாக ஆட்டத்தை துவங்கினர். இதில் நிசாகத் கான் 13 ரன்கள் எடுத்த போது, ரன் அவுட் ஆகி விக்கெட் வீழ்ச்சியை துவங்கி வைத்தார்.
ஆறுதல் கூட்டணி
ஹாங்காங் அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்த வண்ணம் இருந்தது. 16.3 ஓவரில் 44-5 என மோசமாக இருந்தது ஹாங்காங். நூறு ரன்களை கூட தாண்ட வாய்ப்பில்லை என்ற பரிதாப நிலையில் தவித்தது. அப்போது ஆறாவது விக்கெட்டுக்கு கூட்டணி சேர்ந்த ஐசாஸ் கான் மற்றும் கே.டி.ஷா இணைந்து 53 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து ஹாங்காங் 97 ரன்கள் இருக்கும் போது ஐசாஸ் கான் 27 ரன்களில் உஸ்மான் கான் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார்.
ஒரே ஓவரில் 3 விக்கெட்கள்
30வது ஓவரின் இரண்டாம் பந்தில் ஐசாஸ் கானை வெளியேற்றிய உஸ்மான், அடுத்து அதே ஓவரில் 5வது மற்றும் 6வது பந்தில் மெக்கேக்னி மற்றும் தன்விர் அப்சால் இருவரையும் வீழ்த்தினார். 26 ரன்கள் அடித்த நிலையில் கே.டி.ஷா வெளியேற, அடுத்த சில ஓவர்களில் ஹாங்காங் அணி 116 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பாகிஸ்தான் சார்பில் உஸ்மான் கான் 3 விக்கெட்கள், ஹசன் அலி, ஷதாப் கான் தலா 2 விக்கெட்கள், பாஹீம் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
எளிதாக வென்ற பாகிஸ்தான்
எளிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு, இமாம் உல் ஹக் மற்றும் பக்கர் ஜமான் நல்ல துவக்கம் அளித்தனர். ஜமான் 24, பாபர் ஆசம் 33 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். எனினும், இமாம் உல் ஹக் நிலைத்து நின்று அரைசதம் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான் அணி. ஷோயப் மாலிக் ஆட்டமிழக்காமல் 9 ரன்களுடன் களத்தில் இருந்தார். எஹ்சான் கான் மட்டும் 2 விக்கெட்கள் வீழ்த்தி ஹாங்காங் அணிக்கு ஆறுதல் அளித்தார்.
குரூப் "ஏ" பிரிவில் பாகிஸ்தான் ஒரு வெற்றியுடன், இரண்டு புள்ளிகள் பெற்று பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அடுத்து குரூப் "ஏ" நாளை இந்தியா, ஹாங்காங் மோதும் போட்டி நடைபெற உள்ளது.