
ஆசிய கோப்பை தொடர்
ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தொடக்கத்தில் இருந்தே பின்னடைவாக இருந்து வந்தது. முன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் பட்டேல் ஆகிய இருவருமே காயத்தால் பாதிக்கப்பட்டனர். இதனால் அனுபவமே இல்லாத ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இது ஒருபுறம் இருக்க, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்-க்கு கொரோனா உறுதியானது.

டிராவிட்டின் நிலை
அமீரகத்திற்கு புறப்படும் நேரத்தில் கொரோனா உறுதியானதால், உடனடியாக அவர் பெங்களூருவில் தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு மாற்றாக வி.வி.எஸ்.லக்ஷ்மண் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். பாகிஸ்தான் போட்டி முடிந்த பிறகு ராகுல் டிராவிட் வருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியாவுக்கு நற்செய்தி
இந்நிலையில் கடைசி நேரத்தில் நற்செய்தி கிடைத்துள்ளது. அதாவது ராகுல் டிராவிட் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு முறை நெகட்டிவ் என முடிவு வந்துவிட்டது. இதனையடுத்து டிராவிட் உடனடியாக துபாய்-க்கு புறப்பட அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணியுடன் அவர் இருப்பார் எனத் தெரிகிறது.

ஒரே ஒரு குறை
எனினும் பாகிஸ்தானுடனான போட்டியில் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்பட மாட்டார். திட்டமிட்டபடி லக்ஷ்மண் அந்த பணிகளை செய்ய, டக் அவுட்டில் இருந்து டிராவிட் முக்கிய அறிவுரைகளை வழங்கவுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே ரோகித் - டிராவிட் இருவரும் தொலைபேசியில் திட்டங்களை பகிர்ந்து வந்த சூழலில் தற்போது கூடுதல் பலம் சேர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











