
விராட் கோலி அதிரடி
தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வந்த இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் - விராட் கோலி ஜோடி அட்டகாசமான தொடக்கத்தை கொடுத்தனர். தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய கே.எல்.ராகுல் 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பின்னர் தனது கியரை மாற்றிய விராட் கோலி ஆஃப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார்.

71வது சதம் விளாசல்
இதனால் 53 பந்துகளில் சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி தனது 71வது சதத்தை பூர்த்தி செய்தார். இதோடு இவரின் ஆட்டம் முடியவில்லை. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கோலி 61 பந்துகளில் 122 ரன்களை விளாசி அசத்தினார். இதில் 6 சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகள் அடங்கும். இதனை கண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர்.

எப்படி சாதித்தார்
கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு 1020 நாட்களாக ஒரு சதம் கூட அடிக்காமல் இருந்த விராட் கோலி இன்று ஸ்பெஷல் வியூகம் மூலம் தனது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். கடும் மன அழுத்தத்தில் இருந்த கோலிக்கு முக்கிய பலவீனமாக அமைந்திருந்தது அவரின் கவர் ட்ரைவ்கள் தான். விராட் கோலி ஆஃப் சைட் திசையில் பலமாக இருக்கிறார் என்பதை தெரிந்துக்கொண்ட பவுலர்கள், அவர் எங்கு தவறு செய்கிறார் என்பதை சரியாக கண்டறிந்து அவுட்டாக்கி வந்தனர்.

பேட்டிங் ஸ்டைல் மாற்றம்
இதனால் இந்த ஆசிய கோப்பை தொடரில் கோலி தனது பேட்டிங் ஸ்டைலை மாற்றினார். அதாவது பந்துகளை பெரியளவில் ஆஃப் சைடில் அடிக்காமல், பெரும்பாலும் லெக் சைட் திசைகளில் மட்டுமே அடித்து வந்தார். பவுண்டரிகள் முதல் சிக்ஸர்கள் வரை அனைத்துமே லெக் சைட் திசையில் தான் வந்தன. இதனால் லெக் சைடில் கோலியை எப்படி சமாளிப்பது என்பதை தெரியாமல் பவுலர்கள் விழிப்பிதுங்கினர்.

ஓய்வும் காரணமா?
கடும் மன அழுத்தத்தில் இருந்த கோலிக்கு, ஓய்வு தேவை என வல்லுநர்கள் அறிவுறுத்திக்கொண்டே இருந்தனர். அதன்படியே ஒரு மாத காலமாக நீண்ட ஓய்வில் இருந்து வந்தார். இந்த ஓய்வு தான் கோலிக்கு திருப்புமுணையை ஏற்படுத்தியது என பலரும் கூறி வருகின்றனர். ஆனால் பேட்டிங் ஸ்டைலை மாற்றியதே உண்மையான காரணமாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











