
பாகிஸ்தான் தோல்வி
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி வீரர்கள், இலங்கையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் 19.1 ஓவர்களில் அந்த அணி 121 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் பின்னர் ஆடிய இலங்கை அணி 17 ஓவர்களில் 5 விக்கெட்களை மட்டுமே இழந்து 124 ரன்களை எடுத்து வெற்றி கண்டது.

திடீர் பரபரப்பு
இந்நிலையில் இந்த போட்டியில் பாபர் அசாம் அம்பயரிடம் கோபப்பட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இலங்கை அணியின் இன்னிங்ஸின் போது ஆட்டத்தின் 16வது ஓவரில், நிஷங்கா பேட்டிங் செய்ய, ஹஷன் அலி பந்துவீசினார். ஷார்ட் பிட்ச்சாக போடப்பட்ட முதல் பந்து நிஷங்கா பேட்டில் அவுட்சைட் எட்ஜாக மாறியது போன்று மிஸ்ஸானது.

டி.ஆர்.எஸ் வாய்ப்பு
இதனையடுத்து விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் மிகவும் உறுதியாக அவுட் என அம்பயரிடம் முறையிட்டார். கேப்டன் பாபர் அசாம், கலந்து ஆலோசிக்க, அனைத்து வீரர்களும் கூடினர். எனினும் பாபர் அசாம் டி.ஆர்.எஸ் கேட்கவில்லை. ஆனால் அம்பயர் அவராகவே டி.ஆர்.எஸ்-க்கு முறையிட்டு, சிக்னல் காட்டினார். இது அனைவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

பாபரின் ஆவேசம்
பந்தை நன்கு ஆராய்ந்து 3வது நடுவர், நாட் அவுட் என்று முடிவு கொடுத்தார். இதனால் ஒரு டி.ஆர்.எஸ்-ஐயும் பாகிஸ்தான் இழந்தது. இதனால் ஆத்திரமடைந்த பாபர் அசாம், நான் தானே இங்கு கேப்டன், நீங்களாக முடிவெடுத்து எதற்கு சிக்னல் காட்டுகிறீர்கள். நான் உங்களிடம் கேட்டேனா? எனக் கூறி ஆக்ரோஷமாக கேட்டார். இதனால் களத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

ஆசிஃப் அலியின் சர்ச்சை
இந்த தொடரில் ஏற்கனவே பாகிஸ்தான் வீரர் ஆசிஃப் அலி, ஆஃப்கானிஸ்தான் வீரரை அடிப்பதற்காக பேட்டை தூக்கிக்கொண்டு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படி இருக்கையில் நேற்று கேப்டன் பாபர் அசாம் அம்பயருக்கு எதிராக இன்னும் கொஞ்சம் சண்டையிட்டிருந்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருக்கும்.


Click it and Unblock the Notifications