
இந்தியா தோல்வி
இந்திய அணியின் ஓப்பனிங் வீரர்கள் ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் முதல் விக்கெட்டிற்கு 54 ரன்களை சேர்த்தனர். ஆனால் மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ் (13), ரிஷப் பண்ட் (14), ஹர்திக் பாண்ட்யா (0) என அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். விராட் கோலி மட்டும் தனியாளாக அடித்த 60 ரன்கள் தான் இந்திய அணியை காப்பாற்றி கரைசேர்த்தது.

மோசமான ஷாட்
துபாய் களத்தில் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்துவதால், இடதுகை பேட்ஸ்மேன்கள் மிடில் ஓவர்களில் தேவை. அந்தவகையில் தினேஷ் கார்த்திக் போன்ற நல்ல ஃபார்மில் இருக்கக்கூடிய வீரரை ஓரம்கட்டிவிட்டு, இளம் வீரர் ரிஷப் பண்ட்-ஐ அணியில் சேர்த்தனர். பேட்டிங்கிற்கு பிட்ச் நன்றாக இருந்த போதும், அவர் டைமிங்கே இல்லாமல் மோசமான ஷாட்டை ஆடி அவுட்டானார். அவர் அவுட்டானது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாக சென்றது. ரோகித் சர்மாவும் இதற்கு பண்ட்-ஐ ஓய்வறையில் திட்டிய வீடியோ இணையத்தில் வெளியானது.

டிராவிட் அதிரடி
இந்நிலையில் இதுகுறித்து டிராவிட் அதிரடி முடிவை கையில் எடுத்துள்ளார். அதாவது இனி வரும் போட்டிகளில் இடதுகை என்ற ஃபார்முலாவை தள்ளிவைத்துவிட்டு, இந்தியாவின் வழக்கமான பேட்டிங் பலத்துடன் செல்லவுள்ளது. அதன்படி லோயர் ஆர்டரில் இனி பண்ட்-க்கு பதிலாக தினேஷ் கார்த்திக் தான் களமிறங்கவுள்ளார்.

பண்ட்-ன் பிரச்சினை
24 வயது மட்டுமே ஆகும் ரிஷப் பண்ட், பாகிஸ்தான் போன்ற பெரிய போட்டிகளின் போது பதற்றமடைகிறார். அங்கு ஏற்படும் அழுத்தங்களால் தவறான ஷாட்டை அடித்துவிடுகிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே வரவுள்ள ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியிலும் இந்தியா - பாகிஸ்தான் மோதுவதற்கு தான் அதிக வாய்ப்புள்ளது. அந்த போட்டியில் அவர் இல்லாமல் ஆடி பழகுவதற்காக தினேஷ் கார்த்திக் இனி அணியில் இருப்பார் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











