
இந்தியாவின் வெற்றி
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனையடுத்து விளையாடிய இந்திய அணி 19.4 ஓவர்களில் வெறும் 5 விக்கெட்களை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. குறிப்பாக ஹர்திக் பாண்ட்யா சிக்ஸர் அடித்து த்ரில் வெற்றியை பெற்று கொடுத்தார். இந்நிலையில், ரன் அடிக்க முடியாமல் திணறி வந்த இந்திய அணிக்கு, பாபர் அசாம் செய்த ஒரே ஒரு தவறு தான் நல்ல விஷயமாக அமைந்தது.

காரணம் என்ன
நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி 5 பவுலர்களை மட்டுமே நம்பி களமிறங்கியது. இதில் 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் 2 ஸ்பின்னர்கள் அடங்குவர். இதில் 15 ஓவர்களுக்குள் 2 ஸ்பின்னர்களும் தங்களது 4 ஓவர்களையும் வீசியிருக்க வேண்டும். ஆனால் ஸ்பின்னர் முகமது நவாஸ் 20 ஓவர் வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார். இதற்கு காரணம் ராகுல் டிராவிட் தான்.

டிராவிட் மாஸ்டர் ப்ளான்
இந்திய அணியில் 2வது விக்கெட்டிற்கு சூர்யகுமார் யாதவ் தான் களமிறங்க வேண்டும். ஆனால் ஜடேஜாவை அந்த இடத்தில் களமிறக்கினார் ராகுல் டிராவிட். மிடில் ஓவர்களில் இடதுகை ஸ்பின்னரை ஜடேஜா நன்றாக அடிப்பார் என்பதால், அவரை களமிறக்கினார். இதனை புரிந்துக்கொண்ட பாபர் அசாம், உஷாராக செயல்படுவதாக நினைத்து ஜடேஜா அவுட்டாகும் வரையில் முகமது நவாஸின் ஓவரை தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தார்.

ஏமாந்த பாபர்
ஜடேஜாவை வீழ்த்துவதற்காக அனைத்து வேகப்பந்துவீச்சாளர்களையும் பாபர் முன்கூட்டியே பயன்படுத்தினார். ஆனால் கடைசி ஓவர் வரை ஜடேஜா பொருமையாக நின்றுவிட்டார். இதனால் வேறு வழியின்றி கடைசி ஓவரை நவாஸுக்கு கொடுத்தே தீர வேண்டிய கட்டாயம் உருவானது. இங்கு ஜடேஜா முதல் பந்திலேயே அவுட்டானது தான் எதிர்பாராத சம்பவம். எனினும் 2வது ப்ளானும் அங்கு ரெடியாக தான் இருந்தது.

2வது ப்ளான் என்ன
நீண்ட நேரமாக நிதானமாக விளையாடி வந்த ஹர்திக் பாண்ட்யா, ஸ்பின்னர்களுக்கு எதிராக தொடர் சிக்ஸர்களை விளாசக்கூடிய திறமை படைத்தவர். இதனால் தைரியமாக சிங்கிள் கூட ஓடாமல் நின்றார். அதன் பலனாக அசால்ட்டாக கடைசி ஓவரில் சிக்ஸரை விளாசி வெற்றியை தேடிக்கொடுத்தார். பொதுவாக கடைசி ஓவரில் ஸ்பின்னர்களிடம் யாரும் ஓவர் கொடுக்கமாட்டார்கள். ஆனால் நேற்று டிராவிட் விரித்த வலையில் பாபர் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications