துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டத்தில் வங்கதேச அணியும், இலங்கை அணியும் மோதியது.

டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீசுவதாக அறிவித்தது. இலங்கை அணியில் மதிஷா பதிரானாவுக்கு பதிலாக அசிதா பெர்னான்டோ களமிறங்குகிறார்.
இதே போன்று வங்கதேச அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அனாமுல் ஹக், முகமது நயிம் மற்றும் முகமது சயிஃபுதின் ஆகியோர் நீக்கப்பட்டு சபிர் ரஹ்மான், மெஹதி ஹசன் மற்றும் எபதாட் ஹூசைன் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் சபிர் ரஹ்மான் 5 ரன்களில் ஆட்டமிழக்க, மெஹதி ஹசன் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.26 பந்தகளை எதிர்கொண்ட மெஹதி ஹசன் 38 ரன்கள் விளாசினார், இதில் 2 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும்.
மூன்றாவது வீரராக களமிறங்கிய ஷகிபுல் ஹசன் நிதானமாக விளையாடி 22 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 6 ஆயிரம் ரன்கள் மற்றும் 400 விக்கெட்டுகள் வீழ்த்திய 2வது வீரர் என்ற பெருமையை ஷகிபுல் ஹசன் பெற்றார். முதலிடத்தில் பிராவோ உள்ளார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆபிஃப் ஹூசைன், 22 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்தார். அவருக்கு மகமுதுல்லா பக்க பலமாக நின்று 22 பந்துகளில் 27 ரன்கள் சேர்க்க, இறுதியில் மோசதெக் ஹூசைன் 9 பந்துகளில் 24 ரன்கள் குவிக்க, 20 ஓவர் முடிவில் வங்கதேசம் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது.