முல்தான் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 15 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் நடத்தப்படுகிறது. உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்பாக இந்த தொடர் நடைபெறுவதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை இந்த தொடர் ஏற்படுத்தியது.
மேலும் பாகிஸ்தானில் இந்த போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு இருப்பதாக முதலில் நம்பப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் நேபாளம் அணிகள் விளையாடும் போட்டியை பார்வையாளர்கள் காண ஆர்வம் காட்டவில்லை.

இதனால் முல்தான் கிரிக்கெட் மைதானம் காற்று வாங்குகிறது. பொதுவாக சிறிய அணிகளுடன் பெரிய அணிகள் விளையாடும்போது எதிர்பார்ப்பு இல்லாமல் இருப்பது இயல்புதான். ஆனால் தங்களுடைய அணி முதலில் பேட்டிங் செய்கிறது என்றால் பெரும்பான்மையான ரசிகர்கள் மைதானத்தை நோக்கி குவிந்து விடுவார்கள். இந்த நிலையில் பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த பிறகும் மைதானம் காற்று வாங்குகிறது.
இது போட்டி ஏற்பாட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. போட்டியை காண பாகிஸ்தான் ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லையா? இல்லை பொருளாதார நெருக்கடி காரணமாக கிரிக்கெட் போட்டிகளுக்கு மக்கள் பணத்தை செலவழிக்க விரும்பவில்லையா? இல்லை ஆசிய கோப்பை போன்ற தொடருக்கு இருக்கும் முக்கியத்துவம் குறைகிறதா என பல்வேறு கேள்விகள் தற்போது ஏற்பட்டு இருக்கிறது.

மேலும் இதனை வாய்ப்பாக பயன்படுத்தி இந்திய ரசிகர்கள் பாகிஸ்தானை கடுமையாக கிண்டல் செய்து வருகிறார்கள். பாபர் அசாம் உலகில் நம்பர் ஒன் வீரராக இருக்கும் நிலையில் தனது சொந்த நாட்டில் அவர் விளையாடும்போது போட்டியை காண ரசிகர்கள் வரவில்லையா என்று பலரும் ஏளனம் செய்து சமூக வலைத்தளத்தில் கிண்டல் செய்து வருகிறார்கள்.
இந்தப் போட்டியில் கூட பாகிஸ்தான் ஆமை வேகத்தில் விளையாடி வருகிறது. ஏழு ஓவர் முடிந்த பிறகும் பாகிஸ்தான் அணி 29 ரன்களை சேர்ப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. நேபாளத்துக்கு எதிராக இவ்வளவு மோசமாக விளையாடுவதா என அந்த அணி ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.