கொழும்பு : சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான சம்பவங்கள் 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நடந்தேறி வருகின்றன.
மேட்ச் ஃபிக்ஸிங் செய்தால் காசுக்காக சில வீரர்களைத் தான் விலைக்கு வாங்கி தாங்கள் சொல்வதை செய்ய வைப்பார்கள். ஆனால், இங்கே அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடரை நடத்தும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அமைப்பே இரண்டு நாடுகளின் கிரிக்கெட் அமைப்புகளை அடிமைகளாக மாற்றி இருக்கிறது.
அதை அந்த நாடுகளின் கிரிக்கெட் அமைப்புகளும் ஒப்புக் கொள்வது போல விளக்கம் அளித்து இருப்பது இன்னும் கேலிக்குரிய செயலாக மாறி இருக்கிறது.
ரிசர்வ் நாள் : 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது மழை குறுக்கிட அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் போட்டி நடைபெறாமல் போகலாம் என்பதால் அந்தப் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ன சிக்கல்? : ஆனால், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் மோதும் போட்டிகளுக்கு ரிசர்வ் நாள் அறிவிக்கப்படவில்லை. அந்த அணிகள் மோதும் போட்டியின் போதும் மழை வரலாம். அப்படி வந்து போட்டி கைவிடப்பட்டால் அந்த அணிகளுக்கு ஒரு புள்ளி மட்டுமே கிடைக்கும். மாறாக இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் மழை வந்தால் ரிசர்வ் நாளில் போட்டி நடைபெறும். அதில் வெல்லும் அணி இரண்டு புள்ளிகளையும், தோற்கும் அணி எந்தப் புள்ளியையும் பெறாமலும் போகும்.
வலுத்த எதிர்ப்பு : இந்த பாரபட்சமான விதி காரணமாக இலங்கை, வங்கதேச அணிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டதாக இந்திய ரசிகர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இலங்கை மற்றும் வங்கதேச கிரிக்கெட் அமைப்புகள் இதற்கு என்ன சொல்லப் போகின்றன? என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால், அவர்கள் கொடுத்த விளக்கம் அனைவரையும் மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
சமாளிப்பு விளக்கம் : இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த வங்கதேச கிரிக்கெட் அமைப்பு மற்றும் இலங்கை கிரிக்கெட் அமைப்புகள், ஒரே மாதிரியாக இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு மட்டுமான ரிசர்வ் நாள் என்ற முடிவு நான்கு அணிகளையும் கலந்து ஆலோசித்தே எடுக்கப்பட்ட முடிவு என கூறி உள்ளன. இந்த விளக்கத்தை சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு இந்த இரண்டு அமைப்புகளும் ஆளாக்கப்பட்டு இருக்கின்றன என்பது அவர்கள் ஒரே மாதிரி ராகத்தில் விளக்கம் அளித்ததில் இருந்தே தெரிகிறது.
அடிமைத்தனம் : ஒரு தொடரில் திடீரென ஒரு போட்டிக்கு மட்டும் ரிசர்வ் நாள் என அறிவித்து மற்ற போட்டிகளுக்கு இல்லை எனக் கூறுவது ஒரு தவறான செயல். அதனால் புள்ளிப் பட்டியலில் குழப்பம் ஏற்படும். இதை பாதிக்கப்படும் அணிகள் கட்டாயம் எதிர்த்து இருக்க வேண்டும். ஆனால், அந்த அணிகளின் பொறுப்பு அமைப்புகளே அதை ஆதரித்து விளக்கம் சொல்வது எல்லாம் நவீன அடிமைத்தனத்தின் வெளிப்பாடு. இந்தியா - பாகிஸ்தான் போட்டியைக் காண ஆவலாக இருக்கும் ரசிகர்களை விற்பனை பொருளாக பாவித்துதான் இந்த சம்பவமே நடந்து கொண்டு இருக்கிறது என்பது அனைவருக்கும் புரிந்தால் தான் இந்த நிலை மாறும்.