கொழும்பு : 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அடுத்து வரும் சூப்பர் 4 போட்டிகள் இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற உள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி செப்டம்பர் 10 அன்று நடைபெற உள்ளது. அந்தப் போட்டியைக் காண இரு நாட்டு ரசிகர்களும் ஆவலாக உள்ளனர். ஆனால், போட்டி நடப்பதே சந்தேகம்தான் என்ற உண்மை தற்போது தெரிய வந்துள்ளது. அந்த அளவிற்கு அங்கே மழை கொட்டித் தீர்க்கிறது. மொத்த தொடருமே பாதிக்கப்படலாம் எனும் அளவிற்கு நிலைமை உள்ளது. இலங்கையில் இருந்து சிலர் அங்குள்ள நிலைமையை வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளனர்.

தவறான முடிவு : 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் முழுவதுமாக பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால், இந்திய அணி அங்கே செல்ல மறுத்ததால் பல போட்டிகள் இலங்கைக்கு மாற்றப்பட்டன. ஆனால், அது தவறான முடிவாக மாறியது.
பாதியில் நின்ற போட்டி : காரணம், செப்டம்பர் மாதம் இலங்கையில் மழை அதிகம் பெய்யும். குரூப் சுற்றுப் போட்டிகளின் போதே மழை காரணமாக பல போட்டிகள் ஓவர்கள் குறைக்கப்பட்டு தான் நடந்தது. அதிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் குரூப் சுற்றுப் போட்டி பாதியில் நின்றது. இரு அணிகளும் புள்ளிகளை பங்கிட்டு கொண்டனர்.
கொட்டித் தீர்க்கும் மழை : தற்போது கொழும்பில் பெரு மழை பெய்து வருகிறது. அது குறித்து டிவிட்டரில் வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ள ஒருவர் "இன்றைய பதிவு" எனக் கூறி பிரேமதேசா மைதானத்தில் எந்த அளவிற்கு மழை பெய்கிறது என்பதை காட்டி இருக்கிறார்.
2 நாள் ஆகும் : தற்போது பெய்யும் மழையால் போட்டி நடக்கும் மைதானத்தை சீர் செய்யவே இரு நாட்கள் ஆகும் என சிலர் கூறுகின்றனர். மேலும், அடுத்த இரு நாட்களிலும் மழை பெய்தால் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடப்பதே கடினம்.
70 சதவீதம், இரவில் மழை : ஒருவேளை இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தாலும், போட்டி தினத்தன்று இரவு நேரத்தில் மழை பெய்யக்கூடும் என வானிலை மைய தகவல்கள் கூறுகின்றன. இதைத் தவிர இன்னும் ஐந்து போட்டிகளும் இதே மைதானத்தில் தொடர்ந்து நடைபெற உள்ளன. அவையும் தடைபடும் அபாயம் உள்ளது.
முடிவை மாற்றலாம்? : ஏற்கனவே, இரு நாட்கள் முன்பு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் போட்டியை இலங்கையில் உள்ள ஹம்பாந்தொட்டா-விற்கு மாற்றுவதாக கூறி பின் ஒரு மணி நேரத்தில் அந்த முடிவை மாற்றியது. எனவே, தற்போதுள்ள நிலையை கருத்தில் கொண்டு போட்டிகளை இப்போதாவது மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இறுதிப் போட்டி நிலை : இதில் மற்றொரு கவனிக்கதக்க விஷயம் இறுதிப் போட்டி நடைபெறவில்லை என்றால் கோப்பை இறுதிக்கு முன்னேறும் இரு நாடுகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். இறுதிப் போட்டிக்கு கூடுதல் இருப்பு நாளும் ஒதுக்கப்படவில்லை. இந்த தகவல்களை அறிந்த இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்கள் குரூப் சுற்றை போன்றே இப்போதும் போட்டியைக் காண முடியாதா? என சோகத்தில் ஆழ்ந்து இருக்கின்றனர்.