மும்பை : இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ள ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றுப் போட்டி, ரிசர்வ் நாள் உள்ளிட்ட இரண்டு நாட்களும் மழையால் நடக்காமலே போகட்டும் என முன்னாள் இந்திய அணி வேகப் பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் கடும் கோபமாக கூறி இருக்கிறார்.
அவரது கோபம் ஒரு வகையில் நியாயமானது தான் என ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பி உள்ளனர். என்ன நடந்தது?

மழை : 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் அடுத்த ஐந்து போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி இலங்கையில் நடைபெற உள்ளது. அங்கு மழையால் முந்தைய சில போட்டிகள் பாதிக்கப்பட்டு முழுமையாக நடைபெறவில்லை. குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய குரூப் சுற்றுப் போட்டி பாதியில் கைவிடப்பட்டது.
ரிசர்வ் நாள் : அதே போல மீண்டும் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் நடந்து விடக் கூடாது என்பதால் ரிசர்வ் நாளை அறிவித்து இருக்கிறது ஆசிய கிரிக்கெட் கவுன்சில். அதன் மூலம், போட்டி முதல் நாள் அன்று தடைபட்டாலோ அல்லது நடக்காமல் போனாலோ மறுநாள் தொடர்ந்து நடைபெறும். இது இந்தியா - பாகிஸ்தான் அணிகளின் ரசிகர்கள் அளவில் வரவேற்க்கப்படும் முடிவாக இருந்தாலும் இதில் பெரிய சர்ச்சையும் அடங்கி உள்ளது.
மற்ற அணிகளுக்கு இல்லை : இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஒரே ஒரு சூப்பர் 4 போட்டிக்கு மட்டுமே ரிசர்வ் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர்த்து இறுதிப் போட்டிக்கு மட்டுமே ரிசர்வ் நாள் உண்டு. மற்ற இரண்டு அணிகளான இலங்கை, வங்கதேசம் மோதும் எந்தப் போட்டிக்கும் ரிசர்வ் நாள் இல்லை என்பது தான் அந்த சர்ச்சை.
காரணம் என்ன? : தொலைக்காட்சி விளம்பர வருவாய் மற்றும் மைதானத்தில் கிடைக்கும் டிக்கெட் வருவாய் பாதிக்கப்படாமல் இருக்கவே இந்த முடிவு என காரணம் ஒன்றை சிலர் கூறி வருகின்றனர். அதே சமயம், குரூப் சுற்றுப் போட்டி பாதிக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு வருவாய் குறைந்ததாக நஷ்ட ஈடு கேட்டதும் ஒரு காரணம்.
நியாயமற்ற செயல் : ஆனால், இந்தியா - பாகிஸ்தான் போட்டி வருவாயை மட்டும் கருத்தில் கொண்டவர்கள், ரிசர்வ் நாள் என்பது எப்படி வருகிற தொடரின் ஒரு போட்டிக்கு மட்டும் இருக்க முடியும். அது மற்ற அணிகளின் சமய வாய்ப்பை குலைக்கும் செயல் ஆகாதா? என்பது பற்றி யோசிக்கவில்லை. இது நியாயமற்ற செயல் என இலங்கை, வங்கதேச அணி ரசிகர்கள் கொதித்து போயுள்ளனர்.
பொங்கிய வெங்கடேஷ் பிரசாத் : இந்த விவகாரம் குறித்து மற்ற முன்னாள் இந்திய வீரர்கள் எல்லாம் கப்சிப் என்று இருக்க, வெங்கடேஷ் பிரசாத் பொங்கி இருக்கிறார். "இது உண்மை என்றால் முற்றிலும் வெட்கக்கேடானது. மற்ற இரு அணிகளுக்கும் வேறு மாதிரி விதிகளை விதித்து நிர்வாகத்தினர் இதை கேலிக்கூத்தாக்கி, நியாயமற்ற செயலை செய்துள்ளனர்" என கூறி உள்ளார்.
போட்டி நடக்காமல் போகட்டும் : மேலும், "நீதியின் பெயரால், முதல் நாள் போட்டி நடக்காமல் போன பின், இரண்டாம் நாள் கடும் மழை வந்து போட்டி நடக்காமல் போகட்டும். அவர்களின் இந்த தீய திட்டம் நிறைவேறாமல் இருக்கட்டும்" என கடும் வார்த்தைகளை வீசி இருக்கிறார்.