கேண்டி : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் நாளை இலங்கையின் பாலக்கல்லே நகரில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி இரு அணி வீரர்களுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் இதில் வெற்றி பெறும் அணி இந்த தொடரில் நல்ல உத்வேகத்தை பெற்று கோப்பையை கூட வெல்லும் வல்லமையை பெறும். உலக கோப்பை தொடருக்கு இன்னும் 34 நாட்கள் தான் உள்ளதால் ஆசிய கோப்பையை வெல்லும் அணிக்கு உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாட வாய்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில் வெற்றியுடன் இந்திய அணி தொடரை தொடங்கும் உத்வேகத்தில் இருக்கிறது. இந்த நிலையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் பல பரிட்சை நடத்துகிறது. இந்திய அணியில் பேட்டிங் பந்துவீச்சு என பலமாக இருந்தாலும் சில முக்கிய வீரர்கள் காயத்திலிருந்து திரும்பி இருக்கிறார்கள்.
இதனால் அவர்கள் எந்த கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்காமல் தற்போது மிகப்பெரிய போட்டியில் விளையாடுவதால் அவர்களுக்கு நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் பந்துவீச்சிலும் முகமது சமி, பும்ரா ஆகியோர் நீண்ட நாட்களுக்குப் பிறகு கிரிக்கெட் போட்டிக்கு திரும்பியுள்ளனர். பாகிஸ்தானை பொறுத்தவரை பேட்டிங்கில் முதல் நான்கு வீரர்களும் வேகப் பந்துவீச்சு மற்றும் சுழற் பந்து வீச்சும் பலமாக உள்ளது.
எனினும் அந்த அணியின் நடுவரிசை கொஞ்சம் அனுபவம் குறைவாக இருக்கிறது. இதனால் நாளைய ஆட்டத்தில் நிச்சயம் பட்டாசாக இருக்கும்.இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 சேனலில் பார்க்கலாம். மேலும் இந்த போட்டி டிஸ்னி ஹாட் ஸ்டார் இல் இலவசமாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இதனிடையே போட்டி நடைபெறும் பாலக்கல்லே மைதானத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இன்று மழை பெய்யவில்லை. இதே போல் ஒரு நிலை நாளையும் இருக்கும் என தெரிகிறது. மேலும் மழை குறுக்கிட்டாலும் அது போட்டியை பெருமளவு பாதிக்காது என்றும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் இந்தியா பாகிஸ்தான் போட்டியை வெகுவாக எதிர்பார்க்கலாம்.