கண்டி: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி இன்னும் சில மணி நேரங்களில் தொடங்கவுள்ள நிலையில், பாலக்கலே மைதானத்தின் வானிலை நிலவரம் பற்றி பார்க்கலாம்.
இலங்கையில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கிரிக்கெட் போட்டிகள் திட்டமிடப்படாது. அந்த மாதங்களில் அதிகளவு மழை பெய்யும் என்பதால், இலங்கை அணி வீரர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வர். ஆனால் ஆசியக் கோப்பை தொடர் ஆகஸ்ட் மாதத்தில் எதிர்பாராத வகையில் திட்டமிடப்பட்டது. இதனால் ஆசியக் கோப்பை போட்டிகள் மழையால் ரத்து செய்யப்படும் அபாயம் கூட உருவாகியுள்ளது.

கண்டி பகுதியில் அமைந்துள்ள பாலக்கலே மைதானத்தில் பெரும்பாலான போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டது. இன்று திட்டமிடப்பட்டுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்னும் சிறிது நேரத்தில் தொடங்கவுள்ளது. ஆனால் ஆட்டம் முழுமையாக நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கண்டி பகுதியின் வானிலை தகவல்கள் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடங்கும் போது வானிலையில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது. மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை வானிலையில் பிரச்சனையில்லை என்றாலும், இரவு 7 மணிக்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதன்பின் இரவு 11 மணி வரை அதிகளவு மழை பொழிவு இருக்கும் என்று வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கு சிக்கல் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் டிஎல்எஸ் விதிமுறைப்படி முடிவு எடுக்க அதிகளவு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் கண்டியில் தற்போது வானிலை நன்றாக போட்டிக்கு ஏற்றவாறு உள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் உற்சாகமாக மைதானத்திற்கு வர தயாராகி வருகின்றனர்.