கொழும்பு : 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பல்வேறு குளறுபடிகள் நடந்து வருகின்றன.
அதன் உச்சமாக மழை பெய்யும் எனத் தெரிந்தும் கொழும்பில் நடக்க வேண்டிய சூப்பர் 4 சுற்றுப் போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்றாமல் அடம்பிடித்து வருகிறது இந்த தொடரை நடத்தும் அமைப்பான ஆசிய கிரிக்கெட் கவுன்சில்.
ஆனால், இதன் பின்னணியில் இந்திய அணி வீரர்கள் சிலர் இருப்பதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. இந்திய அணி வீரர்கள் என்பதை மட்டும் சொல்லாமல் இந்த விஷயத்தை பொது வெளியில் போட்டு உடைத்து இருக்கிறார் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்.

என்ன நடந்தது? : 2023 ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடரில் போட்டிகளின் பின்னணியில் பல்வேறு அரசியல் நடந்து வருகிறது. சூப்பர் 4 சுற்றின் ஐந்து போட்டிகளின் போதும் மழை பெய்யும் என்று தெரிந்தபின் போட்டி நடைபெற வேண்டிய கொழும்பில் இருந்து மற்றொரு மைதானமான ஹம்பன்தொட்டாவிற்கு போட்டிகளை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
விமர்சனம் : முதலில் சரி என்ற கவுன்சில், அடுத்த ஒரு மணி நேரத்தில் அதில் இருந்து பின் வாங்கியது. இந்த முடிவு விமர்சனத்துக்கு உள்ளானது. போட்டிகளை எப்படி மழைக்கு நடுவே நடத்துவது என்ற கேள்வியும் எழுந்தது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தான் இந்த தவறை செய்ததாக அனைவரும் குறை கூறி வந்த நிலையில் இதன் பின்னணி தற்போது வெளியாகி உள்ளது.
உண்மை என்ன? : இது பற்றி பேசிய கவாஸ்கர், தனக்கு கிடைத்த ரகசிய தகவல் ஒன்றை கூறினார். அதன்படி ஹம்பன்தொட்டாவிற்கு போட்டிகளை மாற்ற மறுப்பு தெரிவித்தது சில கிரிக்கெட் வீரர்கள் தான் என தனக்கு தகவல் கிடைத்து இருப்பதாக கூறினார். அவர்கள் ஹம்பன்தொட்டாவில் ஜிம், பயிற்சிக்கான வசதிகள் இல்லை எனக் கூறி அங்கு செல்ல மறுத்ததாகவும் அவர் கூறி இருக்கிறார்.
யார் அந்த வீரர்கள்? : தான் எந்த அணியின் வீரர்கள் இப்படி செய்தார்கள் என கூறவில்லை. அனைத்து அணிகளின் வீரர்களும் அங்கே தான் இருக்கிறார்கள் எனவும் கூறி இருக்கிறார் கவாஸ்கர். ஆனால், இலங்கை, பாகிஸ்தான், வங்கதேச அணிகளின் வீரர்கள் இப்படி சொல்வார்களா? அல்லது இந்திய அணி வீரர்கள் சிலர் இப்படி சொல்லி இருப்பார்களா? என்பது நமக்கே எளிதாக விளங்கும்.
கசியவிட்டது யார்? : பிசிசிஐ மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா தான் போட்டிகளை கொழும்பில் நடத்துவது குறித்து அதிக விமர்சனங்களை சந்தித்து வருகிறார்கள். எனவே, அவர்கள் தரப்பில் இருந்தே இந்த உண்மைகளை வெளியே கசிய விட்டு இருக்கலாம். ஆனால், இது எதுவுமே தெரியாதது போல பிசிசிஐ கப்சிப் என இருக்கிறது.
சொகுசு தான் முக்கியமா? : அதே சமயம், ஆறு நாடுகள் பங்கேற்கும், உலகக்கோப்பைக்கு அடுத்து மிகப் பெரிய தொடர் ஆசிய கோப்பை. அந்த தொடரை சரியாக நடத்தி முடிக்க தங்களால் முடிந்தவற்றை செய்யாமல் ஜிம் இல்லை என்பதையெல்லாம் ஒரு காரணமாக கூறி இருப்பது பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
குளறுபடிகள் : இந்திய வீரர்களின் இந்த சொகுசு ஆசையால் ஆசிய கோப்பை தொடரில் பல்வேறு குளறுபடிகள் அரங்கேறி உள்ளன. குறிப்பாக, சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் நாள் அறிவித்து, வங்கதேச, இலங்கை அணி வீரர்களின் கோபத்துக்கு ஆளாகி இருக்கிறது ஆசிய கோப்பை கவுன்சில். இன்னும் என்னென்ன நடக்கப் போகுதோ?