கொழும்பு : 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை நிர்வகிக்கும் அமைப்பான ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷாவுக்கும், பாகிஸ்தான் அதிகாரி ஒருவருக்கும் இடையே நடந்த காரசார பேச்சுவார்த்தை குறித்த தகவல் இப்போது வெளியாகி உள்ளது.
2023 ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் அணி பெற்று இருந்தது. ஆனால், பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்லாது என பிசிசிஐ கூறியதை அடுத்து ஒவ்வொரு சிக்கலாக துவங்கியது.

சர்ச்சைகள் : ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவே இருந்ததால் பாகிஸ்தான் - ஆசிய கோப்பை கவுன்சில் இடையே பல வாக்குவாதங்கள் எழுந்தன. அதன் முடிவில் சர்ச்சைக்குரிய வகையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் இந்த தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது. மழை பெய்யும் மாதமான செப்டம்பரில் இலங்கையில் போட்டிகளை நடத்துவது குறித்து சர்ச்சையும் எழுந்தது.
முன்னாள் பாகிஸ்தான் அதிகாரி : எனினும், போட்டிகள் திட்டமிட்டபடி பாகிஸ்தானிலும், இலங்கையிலும் தொடங்கின. இலங்கையில், குரூப் சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் ஆடிய போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. இதை அடுத்து முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் நஜாம் சேதி, ஜெய் ஷா மீது தொடர்ந்து புகார் கூறி பதிவுகளை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வந்தார்.
நஷ்ட ஈடு : அது போதாது என இந்தியா - பாகிஸ்தான் போட்டி மழையால் கைவிடப்பட்டதால் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கூறி பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் நஷ்ட ஈடு கேட்டது.
இலங்கையில் சந்திப்பு : அதன் பின்னர்தான் ஜெய் ஷா - பாகிஸ்தான் கிரிக்கெட் அதிகாரிகள் சந்திப்பு இலங்கையில் நடந்துள்ளது. அப்போது பாகிஸ்தான் அதிகாரி, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் ஜெய் ஷாவின் முடிவுகளை விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது.
எகிறிய ஜெய் ஷா : அதைக் கேட்ட ஜெய் ஷா, திருப்பி எகிறியதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல்களை வெளியிட்ட நபர் கூறுகையில் மிக அழுத்தமான வார்த்தைகளால் ஜெய் ஷா பதிலடி கொடுத்தார் என்றும், அதன்பின் அந்த பாகிஸ்தான் அதிகாரி அது குறித்து பேசவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.