மும்பை : 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை இம்முறை பாகிஸ்தான் நடத்த திட்டமிட்டு இருந்தது.
ஆனால் இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த போட்டி நடைபெறுமா என்ற குழப்பம் ஏற்பட்டது. இதை அடுத்து இந்தியா விளையாடும் போட்டிகளை வேற நாட்டில் நடத்திக் கொள்ள பாகிஸ்தான் திட்டம் ஒன்றை வகுத்தது.

இதில் பல்வேறு பிரச்சனைகளுக்குப் பிறகு கடைசியாக இந்தியா ஒப்புக்கொண்டதை எடுத்து தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும் ஆண்டு என்பதால் ஆசிய கோப்பைத் தொடர் இம்முறை 50 ஓவர் போட்டிகளாக நடைபெறும். மொத்தமுள்ள 13 போட்டிகளில் நான்கு ஆட்டம் பாகிஸ்தானிலும் எஞ்சி உள்ள ஒன்பது ஆட்டங்கள் இலங்கையிலும் நடைபெற உள்ளது.
இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபால் ஆகிய அணிகள் மோத உள்ளன. இந்த 6 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாட உள்ளது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெறும். இறுதிப் போட்டி வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும்.
இறுதிப்போட்டி எங்கு நடைபெறும் இந்த தொடருக்கான அட்டவணை என்ன என்பது குறித்து ஆசிய கிரிக்கெட் சங்கம் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்த தொடரை காண வருமாறு ஆசிய கிரிக்கெட் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. பாகிஸ்தானில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. கடந்த முறை 2008 ஆம் ஆண்டு தான் பல நாடுகள் பங்கேற்ற சர்வதேச தொடரான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடைசியாக பாகிஸ்தானில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.