கேண்டி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முக்கிய லீக் ஆட்டமான இந்தியாவும் பாகிஸ்தானும் நாளை சனிக்கிழமை கேண்டியில் பலப்பரிட்சை நடத்துகிறது.இந்த நிலையில் போட்டி நடைபெறுவதற்கு 18 மணி நேரத்திற்கு முன்பே பாகிஸ்தான அணி தங்களுடைய பிளேயிங் லெவனை அறிவித்திருக்கிறது.
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரராக பக்கர் சாமனும், இமாம் உல் ஹக்கும் விளையாட உள்ளார்கள். எப்போதும் போல் நம்பர் மூன்றாவது வீரராக பாபர் அசாம் விளையாட உள்ளார்.

நடு வரிசையில் சல்மான், இப்திகார் அஹமத்,முகமது ரிஸ்வான், ஆகியோர் களமிறங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆல்ரவுண்டராக சதாப்கானும், மூன்று வேக பந்துவீச்சாளராக நசிம் ஷா,ஷாகின் சா அப்ரிடி,ஹரிஷ் ரவுப் ஆகியோர் விளையாட உள்ளதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார். போட்டி நடைபெறுவதற்கு முன்பே பாகிஸ்தான் தங்களுடைய பிளேயிங் லெவனை அறிவித்து இந்தியாவுக்கு எதிராக தங்களது மைண்ட் கேமை தொடங்கி இருக்கிறது.
இதன் மூலம் மூன்று விஷயங்களை பாகிஸ்தான் உணர்த்துகிறது. ஒன்று எங்கள் அணியில் எந்த குழப்பமும் இல்லை, எங்களுடைய வீரர்கள் இவர்கள்தான் என சொல்லாமல் கூறிவிட்டது. மேலும் நாங்கள் இந்தியாவுக்கு எதிராக எந்த அச்சமும் இன்றி நம்பிக்கையுடன் உத்வேகத்துடன் இருக்கிறோம் என்பதை உணர்த்துவதற்காக பாகிஸ்தான் இவ்வாறு செய்துள்ளது.
மேலும் நீங்கள் எங்களுக்கு எதிராக எந்த திட்டத்தை வகுத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. நாளை நாங்கள் பயமின்றி விளையாடுவோம் என்பதை எதிரணிக்கு உணர்த்தவே பாபர் அசாம் இதை செய்திருக்கிறார். இப்படி பாகிஸ்தான் செய்வது முதல் முறை அல்ல. ஏற்கனவே 2021 டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தின் போது பாகிஸ்தான் தங்களுடைய பிளேயிங் லெவனை ஒரு நாள் முன்பே அறிவித்து விட்டது.
அந்தப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தற்போது அதேபோல ஒரு திட்டத்தை பாபர் அசாம் தீட்டி இருக்கிறார். இந்த மைண்ட் கேமில் சில சறுக்களும் இருக்கிறது. உதாரணத்திற்கு குறிப்பிட்ட வீரர்களுக்கு எதிராக நாம் திட்டத்தை வகுத்துக் கொள்ளலாம். ஆனால் உன்னுடைய திட்டத்தில் எனக்கு கவலை இல்லை என்பதை மன ரீதியாக இந்திய வீரர்களுக்கு பதிய வைக்க பாகிஸ்தான் இப்படி செய்து இருக்கிறது. இந்த மைண்ட் கேமை ரோகித் சர்மா முறியடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.