கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த பின், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் - ஷாகின் அப்ரிடி இருவரும் ஓய்வறையில் மோதிக் கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி மீது கொடுக்கப்பட்டு வந்த பில்டப்-கள் அனைத்து காலி செய்யப்பட்டுள்ளது. ஷாகின் அப்ரிடி, ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா என்று தரமான 3 வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பேசிய பேச்சிற்கு இந்திய அணி தரமான பதிலடி கொடுத்தது. அதுமட்டுமல்லாமல் இந்தியாவை தொடர்ந்து இலங்கை அணியிடம் அடைந்த தோல்வி அந்த அணி ரசிகர்களிடையே மிரள வைத்துள்ளது.

ஓய்வறையில் தீட்டப்படும் திட்டத்தில் சிறிய முட்டுக்கட்டை வந்தாலும், மொத்தமாக பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் திணறுவது கண்கூடாகவே தெரிந்தது. இதனால் பாகிஸ்தான் அணி வீரர்களை அந்நாட்டு ரசிகர்களே கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர். இதனால் சோகமடைந்த பாகிஸ்தான் வீரர்கள் ட்விட்டரில் மன்னிப்பு கோரி வருகின்றனர். அதேபோல் உலகக்கோப்பை தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று நம்பிக்கையாக கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் ஓய்வறையில் நடைபெற்றுள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி இருவரும் மோதிக் கொண்டது தெரிய வந்துள்ளது. இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்விக்கு பின் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் வீரர்களை மத்தியில் ஆவேசமாக பேசி இருக்கிறார்.
அதில், யாரும் தங்களை சூப்பர்ஸ்டார் வீரர் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். உலகக்கோப்பை தொடர் அருகில் வந்துவிட்டது. நாம் அனைவரும் ஒரு அணியாக இணைந்து விளையாடி இருந்தால், இந்தப் போட்டியில் வென்றிருக்கலாம் என்று ஆவேசமாக கூறியுள்ளார். அப்போது குறுக்கிட்ட ஷாகின் அப்ரிடி, குறைந்தது சிறப்பாக பேட்டிங் மற்றும் பவுலிங் செய்தவர்களை பாராட்டுங்கள் என்று கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த பாபர் அசாம், எனக்கு யார் சிறப்பாக விளையாடுகிறார்கள் என்பது தெரியும் என்று பதில் அளித்துள்ளார். இதன் காரணமாக பாபர் அசாம் - ஷாகின் அப்ரிடி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே சூழலை உணர்ந்த துணை கேப்டன் முகமது ரிஸ்வான், இருவரையும் சமாதானம் செய்து அமர வைத்துள்ளார். பாகிஸ்தான் அணியின் இரு நட்சத்திர வீரர்கள் மோதிக் கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.