லாகூர் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் சூப்பர் போர் சுற்றில் பாகிஸ்தானுக்கு 194 ரன்கள் இலக்காக வங்கதேச அணி நிர்ணயித்துள்ளது. லாகூரில் நடைபெற்ற சூப்பர் போர் சுற்றில் முதல் ஆட்டத்தில் வங்கதேசமும் பாகிஸ்தானும் லாகூர் கிரிக்கெட் மைதானத்தில் மோதியது.
இதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய மெஹதி ஹசன் டக் அவுட்டாகி வெளியேற அந்த அணியின் அனுபவ வீரர் லிட்டன் தாஸ் 16 ரன்கள் எடுத்தார்.

மற்றொரு தொடக்க வீரரான முஹம்மத் நயிம் 20 ரன்களில் ஆட்டம் இழந்தார். தவ்ஹீத் இரண்டு ரன்களில் ஹரிஷ் ரவுப் பந்துவீச்சில் வெளியேற வங்கதேச அணி 47 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.இதனை அடுத்து ஐந்தாவது விக்கெட்டுக்கு நட்சத்திர வீரர்கள் மற்றும் முஸ்பிகுர் ரஹிம் ஜோடி சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஷகிபுல் ஹசன் 57 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார். இதில் ஏழு பவுண்டரிகள் அடங்கும். அப்போது ஹாரிஸ் ரவுப் பந்துவீச்சில் அவர் வெளியேறினார்.
முஸ்பிகுர் ரஹீம் 64 ரன்களில் பெவிலியன் திரும்ப வங்கதேச அணியின் சரிவு மீண்டும் தொடங்கியது.
குறைந்தபட்சம் 230 அல்லது 240 ரன்களையாவது வங்கதேசம் தொடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நசீம், சாவும் ஹாரிஸ் ரவுப்பும் அபாரமாக பந்து வீசி வங்கதேசத்தின் இன்னிங்ஸை சுக்குநூறாக்கினார். 174 ரன்கள் 5 விக்கெட் என்ற நிலையில் வங்கதேசம் இருந்தபோது இருவரும் ஆக்ரோஷமாக பந்து வீசியதால் மேலும் 19 ரன்கள் சேர்ப்பதற்குள் எஞ்சியுள்ள ஐந்து விக்கெட்டுகளையும் வங்கதேசம் அணி இழந்தது.
இதன் மூலம் 38.4 ஓவர்களில் எல்லாம் வங்கதேசம் அணி 193 ரன்களில் ஆட்டம் இழந்தது. பாகிஸ்தான் பந்துவீச்சு தரப்பில் ஹரிஷ் ரவுப் ஆறு ஓவர்கள் வீசி 19 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். நசிம் ஷா மூன்று விக்கெட்டுகளையும் ஆப்ரிடி ஒரு விக்கெட்டையும் எடுத்திருக்கிறார்கள்.