கொழும்பு : 2023 ஆசிய கோப்பையில் மேலும் ஒரு சர்ச்சையாக பாகிஸ்தான் கிரிக்கெட் அதிகாரிகள் இருவர் போட்டிகள் நடைபெற்று வரும் இலங்கையின் கொழும்பில் உள்ள சூதாட்ட விடுதிக்கு சென்ற வீடியோ வெளியாகி இருக்கிறது.
இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கும் நிலையில், அந்த அதிகாரிகள் கொடுத்த விளக்கம் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் மேலும் கோபத்தை கிளப்பி இருக்கிறது.

யார் அந்த இருவர்? : தற்போதைய பாக்கிஸ்தான் அணியின் ஊடக மேலாளர் உமர் பாரூக் கல்சன் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் சர்வதேச கிரிக்கெட் பிரிவு பொது மேலாளர் அட்னன் அலி ஆகிய இருவரும் இலங்கையில் உள்ள சூதாட்ட விடுதிக்கு சென்ற வீடியோ வெளியாகி உள்ளது.
விதிப்படி தவறு : அவர்களது தனிப்பட்ட விஷயம் என இதை ஒதுக்க முடியாது. காரணம், ஐசிசி விதிப்படி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அணியை சார்ந்த அதிகாரிகள் யாரும் சூதாட்டம் சார்ந்த இடங்களுக்கு செல்லக் கூடாது. ஆனால், அதை மீறி அவர்கள் இருவரும் சென்றுள்ளனர்.
விளக்கம் : இந்த விவகாரம் ஊடகங்களில் வீடியோ ஆதாரத்துடன் வெளியான நிலையில், அந்த அதிகாரிகள், தாங்கள் இரவு உணவு உண்ணவே அந்த சூதாட்ட விடுதிக்கு சென்றதாக ஒரு "அடடே" விளக்கத்தை அளித்துள்ளனர். ரசிகர்கள் இந்த விளக்கத்தை கேட்டு மேலும் பொங்கி வருகின்றனர்.
நீக்க வேண்டும் : கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு அவர்களை உடனடியாக பாகிஸ்தான் அழைத்து பணி நீக்கம் செய்ய வேண்டும். அவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

கடந்த கால நிகழ்வு : பாகிஸ்தான் அதிகாரிகள் இப்படி சிக்குவது முதன்முறையல்ல. முன்னதாக 2015ஆம் ஆண்டில் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது. அப்போது நியூசிலாந்து உலகக்கோப்பை தொடரின் போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் அப்போதைய அணி மேலாளருமான மொய்ன் கான் சூதாட்ட விடுதிக்கு மனைவியுடன் சென்று சிக்கினார். அவரை பாதி தொடரிலேயே அழைத்து பணி நீக்கம் செய்தது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு.
இத்தனை பேரா? : நடப்பு ஆசிய கிரிக்கெட் தொடரில் மட்டும் சுமார் 20 பாகிஸ்தான் கிரிக்கெட் அதிகாரிகள் இலங்கை போவதும், வருவதுமாக இருந்துள்ளனர். எதற்கு இத்தனை பேர் செல்ல வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தொடரை நடத்தும் பொறுப்பு பாகிஸ்தான் வசம் இருப்பதால் அவர்கள் சென்று வருவதாக கூறுவதும் நம்பும்படி இல்லை என்ற கருத்து எழுந்துள்ளது.