மும்பை : 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு ஏற்று நடத்தியது. அந்த தொடரை நடத்தியதில் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக புலம்பிய பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு, தற்போது இலங்கை கிரிக்கெட் அமைப்புக்கு தர வேண்டிய தொகையை தராமல் இழுத்தடித்து வருவதோடு, அந்த தொகையில் ஒரு பகுதியை ஜெய் ஷா தலைவராக இருக்கும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தான் கொடுக்க வேண்டும் என முரண்டு பிடித்து வருகிறது.
2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் முதலில் பாகிஸ்தான் நாட்டில் நடக்க திட்டமிடப்பட்டது. ஆனால், இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் பின்னர் இலங்கைக்கு மாற்றப்பட்டது. ஆனால், அந்த தொடரின் வரவு செலவு கணக்கு மற்றும் லாப நஷ்டம் எல்லாமே பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பை சேர்ந்தது.

பின்னர் நான்கு போட்டிகள் மட்டும் பாகிஸ்தான் நாட்டிலும், மீதமுள்ள போட்டிகள் இலங்கையிலும் நடத்தப்பட்டது. அந்த தொடர் பல குழப்பங்களுக்கு மத்தியில் நடந்து முடிந்தது. ஆனால், தொடரை இலங்கைக்கு மாற்றியதால் டிக்கெட் வருவாயில் தங்களுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு புகார் கூறி வந்தது. ஆனால், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா அதற்கு வேறு யாரும் பொறுப்பேற்க முடியாது என கூறி விட்டார்.
தற்போது இலங்கை கிரிக்கெட் அமைப்பு ஆசிய கிரிக்கெட் தொடரை நடத்த வேண்டிய செய்த செலவுக்கான தொகையை தங்களுக்கு திரும்ப அளிக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பிடம் கேட்டுள்ளது. சுமார் 25 கோடி வரை செலவு செய்துள்ள இலங்கை கிரிக்கெட் அமைப்புக்கு இதுவரை சில கோடிகள் மட்டுமே கொடுத்துள்ளது பாகிஸ்தான்.
மீதமுள்ள செலவுத் தொகையை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என இப்போது ஜெய் ஷாவிடம் கேட்டுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு. அதற்கு அவர் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் எந்த தொகையும் தராது என மறுத்து இருப்பதுடன், இலங்கை கிரிக்கெட் அமைப்பு நேரடியாக செலவுத் தொகையை பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பிடம் இருந்து வசூலித்துக் கொள்ளுமாறு கூறி பிரச்சனையில் இருந்து விலகிக் கொண்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு ஏற்கனவே இந்த தொடரால் நஷ்டம் ஏற்பட்டு இருக்கும் நிலையில் எப்படி பணத்தை கொடுக்காமல் தப்பிப்பது என தவித்து வருகிறது.