லாகூர் : உலக கோப்பை தொடர் நெருங்கும் நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் எடுத்துள்ள முடிவு அதிர்ச்சி அளிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை தொடரில் லீக் ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. போட்டிக்கு 18 மணி நேரத்திற்கு முன்பு பாகிஸ்தான அணி தங்களுடைய பிளேயிங் லெவனை அறிவித்துள்ளது.ஆனால் இந்திய அணி இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் ரமீஸ் ராஜா வெளியிட்டுள்ள வீடியோவில் இந்தியா இன்னும் எந்த முடிவும் எடுக்காமல் பதற்றமாக இருக்கிறார்கள். அவர்கள் இன்னும் தங்களுடைய பிளேயிங் லெவனை தேர்வு செய்யவில்லை. உலகக்கோப்பை தொடர் வேறு அருகில் இருக்கிறது. ஆனால் இதுவரை தாங்கள் எந்த வீரர்களை வைத்து விளையாட போகிறோம் என்று ஒரு முடிவு எடுக்காமல் இருக்கிறார்கள்.
இதை பார்க்கும் போது நிச்சயம் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து தேவையில்லாமல் அணியை மாற்றி வருகிறது. நீங்கள் சோதனை என்ற பெயரில் பேட்டிங் வரிசையை மாற்றினால், உங்களுடைய கவனம் சிதறிவிடும். நீங்கள் யாரை வேண்டுமானாலும் பாகிஸ்தானுடைய பிளேயிங் லெவன் குறித்து கேட்டு பாருங்கள்.
அவர்கள் கொஞ்சமும் கூட யோசிக்காமல் இதுதான் எங்களுடைய அணி என்று கூறுவார்கள். அதுவே இந்தியாவின் பிளேயிங் லெவன் குறித்து கேட்டுப்பாருங்கள். நிச்சயமாக அவர்களால் சொல்ல முடியாது. ஏனென்றால் இன்னும் இந்திய அணியில் சந்தேகங்கள் இருக்கிறது.
இது நிச்சயம் பாகிஸ்தானுக்கு சாதகமாக தான் அமையும் என்று ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை தொடருக்கும் முன்பு இந்திய அணி ஒன்பது சர்வதேச ஒரு நாள் போட்டி மற்றும் 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாட இருக்கிறது. இன்னும் கேஎல் ராகுல் முழு உடல் தகுதியை பெறவில்லை. இந்த ஒன்பது போட்டிகளுக்குள் இந்திய அணி பிளேயிங் லெவனை தேர்வு செய்துவிடுமா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.