கொழும்பு: 2022ஆம் ஆண்டு முதல் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஜடேஜா விளையாடிய 11 இன்னிங்ஸ்களில் மொத்தமாக 174 ரன்கள் மட்டுமே சேர்த்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் சூழலில், ஆஸ்திரேலியா அணியின் மிட்செல் மார்ஷ், இங்கிலாந்து அணியின் லிவிங்ஸ்டன், நியூசிலாந்து அணியில் சாண்ட்னர், தென்னாப்பிரிக்கா அணியில் மார்க்ரம் என்று பலம் வாய்ந்த ஆல்ரவுண்டர்களை உருவாக்கும் பணிகளையும், அவர்களை ஃபார்முக்கு கொண்டு வரும் பணியையும் அந்தந்த அணி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகிறது.

அதேபோல் இந்திய அணியிலும் ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா என்று இரு ஆல்ரவுண்டர் தயாராக இருக்கிறார்கள். இருவரிடமும் ஒவ்வொரு போட்டிக்கும் இந்திய அணி தரப்பில் 5 ஓவர்கள் வீசி ஒரு முக்கியமான விக்கெட் மற்றும் பேட்டிங்கில் 40 ரன்கள் + ஃபினிஷிங் ஆகியவற்றை தான் எதிர்பார்க்கிறது. இதில் ஹர்திக் பாண்டியா 3வது வேகப்பந்துவீச்சாளராக விளையாடும் அளவிற்கு முன்னேற்றத்தை காட்டிவிட்டார்.
ஆனால் 10 ஓவர்கள் வீசும் ஜடேஜா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆசியக் கோப்பை தொடங்குவதற்கு முன் கடந்த 4 ஆண்டுகளில் ஜடேஜா ஆடியுள்ள 22 ஒருநாள் போட்டிகளில் 10 போட்டிகளில் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை என்பது தெரிய வந்தது. இது ஆசியக் கோப்பை தொடரிலும் தொடர்ந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எப்படி பந்துவீச வேண்டுமென்பதை ஜடேஜா தற்போது வரை கற்றுக் கொள்ளாதது வெளிப்படையாகவே தெரிகிறது.
நேற்றைய ஆட்டத்தில் ஜடேஜாவின் ஓவரை குறி வைத்து ஷகிப் அல் ஹசன் வெளுத்து கட்டினார். வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 10 ஓவர்கள் வீசி 53 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரேயொரு விக்கெட்டையே வீழ்த்தினார். இது இந்திய அணிக்கு தலைவலியாக இருந்து வரும் சூழலில், ஜடேஜா பேட்டிங் செயல்பாடுகள் இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
2022ஆம் ஆண்டுக்கு பின் ஜடேஜா ஆடிய 11 இன்னிங்ஸ்களில் வெறும் 174 ரன்கள் மட்டுமே சேர்த்திருக்கிறார். ஜடேஜா 6 அல்லது 7வது வரிசையில் வருகிறார் என்றாலும், அவரின் பேட்டிங் சராசரி 24.85ஆக மட்டுமே உள்ளது. இவரை விடவும் அண்மை காலங்களில் அக்சர் படேலின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. இதனால் இன்னும் சில போட்டிகளில் ஜடேஜா மட்டும் ஃபார்முக்கு திரும்பவில்லை என்றால், இந்திய அணி உலகக்கோப்பையில் பின்னடைவை சந்திக்கும் என்பது உறுதியான ஒன்றாக பார்க்கப்படுகிறது.