லாகூர் : 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை வீழ்த்தி சூப்பர் 4 செல்லும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டது ஆப்கானிஸ்தான் அணி.
நெட் ரன் ரேட் அடிப்படையில் 37.1 ஓவரில் வெற்றி இலக்கான 292 ரன்களை எட்ட வேண்டும் என்ற கட்டாயத்தில் அந்த அணி ஆடியது.

ஆனாலும், 37.1 ஓவர்களுக்கு மேல் போட்டி சென்றாலும் அடுத்த சில பந்துகளில் 292 ரன்களுக்கும் கூடுதலாக சிக்ஸ் அடித்து ரன் சேர்த்து இருந்தாலும் அந்த அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கும்.
என்ன நடந்தது? : இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆன ஆசிய கோப்பை குரூப் பி போட்டி லாகூரில் நடைபெற்றது. இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணி நெட் ரன் ரேட் அடிப்படையில் மிகவும் பின்தங்கி இருந்ததால் இந்தப் போட்டியில் குறைந்த ஓவர்களில் ரன் சேஸ் செய்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் களமிறங்கியது.
இலங்கை ஆட்டம் : இலங்கை அணி மத்திய ஓவர்களில் சிறப்பாக ரன் குவித்தது. அதன் பின் விக்கெட்கள் மளமளவென வீழ்ந்தாலும் அந்த அணி ரன் குவிப்பை நிறுத்தவில்லை. நிசங்கா 41, கருணாரத்னே 32, குசால் மென்டிஸ் 92, அசலங்கா 36 என பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ரன் குவித்து இருந்தனர். ஒன்பதாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வெள்ளாலகே 33, தீகஷனா 28 ரன்கள் குவித்தனர்.
ஆப்கன் நிலை : ஆப்கானிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக 292 ரன்கள் நிர்ணயம் செய்தது இலங்கை. இந்த இலக்கை 37.1 ஓவரில் எட்டினால் மட்டுமே குரூப் சுற்றில் நெட் ரன் ரேட் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களுக்குள் இடம் பெற்று ஆப்கான் அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலையில் அந்த அணி பேட்டிங் செய்யத் துவங்கியது.
சிறப்பான போராட்டம் : அந்த அணியின் துவக்கம் சரியாக அமையாத போதும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரஹ்மத் ஷா 45, ஷாஹிதி 59, நபி 65 ரன்கள் குவித்தனர். நபி 32 பந்துகளில் 6 ஃபோர், 5 சிக்ஸ் அடித்து வெறியாட்டம் ஆடி இருந்தார். 37 வது ஓவரில் ரஷீத் கான் அதிரடி ஆட்டம் ஆட ஆப்கானிஸ்தான் அணி 38 வது ஓவரின் முதல் பந்தில் 3 ரன்கள் எடுத்தால் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலை இருந்தது.
38வது ஓவர் : ஆனால், தனஞ்செயா வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் முஜீப் உர் ரஹ்மான் ஆட்டமிழந்தார். அத்துடன் தங்கள் வாய்ப்பு பறி போனதாக எண்ணிய ரஷீத் கான் அப்போதே சோர்ந்து போனார். ஆனால், அப்போதும் அந்த அணி அடுத்த நான்கு பந்துகளில் ஒரு சிக்ஸ் அடித்து இருந்தாலும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி இருக்கலாம். ஆனால், அது தெரியாத பரூக்கி ரஷீத் கானுக்கு ஸ்ட்ரைக் தர முயலாமல் பந்தை தடுத்து ஆடினார்.
அனலிஸ்ட் செய்த தவறு : 37.4வது பந்தில் பரூக்கி ஆட்டமிழந்தார். ஆப்கானிஸ்தான் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஒருவேளை அவர் ரஷீத் கானுக்கு ஸ்ட்ரைக் கொடுத்து இருந்தால், அவர் சிக்ஸ் அடித்து இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற கையோடு சூப்பர் 4 சுற்றுக்கும் அந்த அணி முன்னேறி இருக்கலாம். அதை ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் அறியவில்லை. இந்த கணக்குகளை அந்த அணியின் அனலிஸ்ட் தான் கூறி இருக்க வேண்டும்.
ரசிகர்கள் விளாசல் : இந்த நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆப்கானிஸ்தான் அணியின் அனலிஸ்ட்டை வறுத்து எடுத்து வருகின்றனர். ஏற்கனவே, 2014 ஐபிஎல் தொடரில் இதே போல மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சிக்ஸ் அடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது .