லாகூர் : 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் பி பிரிவில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே ஆன போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, விக்கெட் வீழ்ச்சிக்கு நடுவே அதிரடியாக ரன் குவித்து அசத்தியது. ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்கள் வீழ்த்திய நிலையிலும் ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் ஏமாற்றம் அடைந்தது.

ஆப்கான் நிலை : இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே ஆன போட்டியில் மிகப் பெரிய வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் தான் ஆப்கானிஸ்தான் அணி இந்தப் போட்டியில் களமிறங்கியது.
இலங்கை அதிரடி : எனவே, இலங்கை அணி பெரிய அழுத்தம் இன்றி இந்தப் போட்டியில் ஆடியது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி துவக்கம் முதலே அதிரடி ஆட்டம் ஆடியது. அந்த அணியின் நிசங்கா 41, கருணாரத்னே 32 ரன்கள் குவித்து நல்ல துவக்கம் அளித்தனர்.
விக்கெட் வேட்டை : அடுத்து வந்த குசால் மென்டிஸ் அதிரடி ஆட்டம் ஆடினார். சமரவிக்ரமா 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அசலங்கா உடன் இணைந்து 100 ரன்கள் கூட்டணி அமைத்தார் குசால் மென்டிஸ். அசலங்கா 36, மென்டிஸ் 92, டி சில்வா 14, சனகா 5 ரன்களில் விக்கெட்களை இழந்தனர். ஆப்கானிஸ்தான் அணி மத்திய ஓவர்களில் விக்கெட் வேட்டை ஆடியது.
ரன் குவிப்பு : ஆனாலும், மென்டிஸ் குவித்த 92 ரன்களுடன், ஒன்பதாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வெள்ளாலகே 33 ரன்களும் மற்றும் தீகஷனா 28 ரன்களும் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதை அடுத்து 50 ஓவர்களில் இலங்கை அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 291 ரன்கள் குவித்தது.
ஆப்கானிஸ்தான் அணி 37.1 ஓவரில் 292 ரன்கள் இலக்கை எட்டினால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான நிலையில் இருந்தது.