லாகூர் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்றின் கடைசிப் போட்டியில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன.
குரூப் பி-இல் இடம் பெற்றுள்ள வங்கதேசம், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளில் எந்த இரண்டு அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

வங்கதேச அணி தான் ஆடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி அடைந்து 2 புள்ளிகளுடன் உள்ளது.
இலங்கை அணி ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி ஒரு தோல்வியுடன் உள்ளது. இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றாலும் ரன் ரேட் அடிப்படையில் பின்தங்கி இருப்பதால் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறுவது கடினம் என கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் அணி -1.780 என்ற அளவில் நெட் ரன் ரேட் வைத்துள்ளது. இதன் காரணமாக அந்த அணி இலங்கை அணிக்கு எதிராக மிகப் பெரிய வெற்றியை பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.
உதாரணமாக, இலங்கை அணி 300 ரன்கள் எடுத்தால் ஆப்கானிஸ்தான் அணி அந்த இலக்கை 31 ஓவர்களில் எட்ட வேண்டும். இது நடக்காத காரியம்.
அதே போல, ஆப்கானிஸ்தான் அணி 300 ரன்கள் எடுத்தால் கூட இலங்கை அணிக்கு எதிராக 127 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற வேண்டும். இலங்கை அணி தற்போது நல்ல பார்மில் இருப்பதால் இதுவும் நடக்காத காரியம்.
எனவே, இந்தப் போட்டியில் இலங்கை அணி போராடி தோற்றால் கூட எளிதாக சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிவிடும். ஆப்கானிஸ்தான் அணி கடந்த காலங்களில் சில பேர் சொல்லும் வெற்றிகளை பெற்று இருந்தாலும், சமீப காலங்களில் படுமோசமான பார்மில் உள்ளது.
குறிப்பாக வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய சுழற் பந்துவீச்சாளர்கள் முஜீப் உர் ரஹ்மான் மற்றும் ரஷீத் கான் ஒரு ஓவருக்கு 6 ரன்களுக்கும் அதிகமாக விட்டுக் கொடுத்து ஏமாற்றத்தை அளித்தனர். எனவே, ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறுவது கடினம் என்றே கூறப்படுகிறது.