கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுடன் தோற்றதால் ஏற்பட்ட கடுப்பில் இந்திய ரசிகர்களை இலங்கை ரசிகர்கள் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
இலங்கை அணி கடந்த 13 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து வெற்றியை பெற்றது. இதனை அடுத்து சூப்பர் 4 லீக் சுற்று ஆட்டத்தில் இந்தியாவும் இலங்கையும் மோதின.

இந்தத் தொடரிலே இந்த போட்டிக்கு தான் அதிக ரசிகர்கள் மைதானத்திற்கு வந்திருந்தார்கள். மேலும் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 213 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மேலும் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் முதல்முறையாக 10 விக்கெட் களையும் சுழற் பந்துவீச்சாளர்களிடம் இந்திய அணி இழந்தது.
இந்த போட்டியில் இலங்கை எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்திய அணி வீரர்களும் சிறப்பாக பந்துவீசி இலங்கைக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்கள். முடிவில் இலங்கை அணி 41.3 ஓவரில் 172 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இதன் மூலம் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடர்ந்து 13 முறை வென்ற இலங்கையின் வெற்றி பயணத்தை தடுத்து நிறுத்தியது. இதனால் கடுப்பான இலங்கை ரசிகர்கள் போட்டி முடிந்தவுடன் அங்கு இருந்த இந்திய ரசிகர்களை கடுமையாக தாக்கினர். இதனால் கடுப்பான இந்திய ரசிகர்களும் பதிலடி கொடுத்தனர். இந்த மோதலை பார்த்து அங்கிருந்த இலங்கை ரசிகர்கள் ஒன்றாக திரண்டு இந்திய ரசிகர்களை மீண்டும் தாக்கினர்.
அங்கு நின்று கொண்டிருந்த போலீசார் முதலில் இதனை கண்டு கொள்ளவில்லை. பிறகு அங்கிருந்து வந்து ரசிகர்களை சமாதானமாக பிரித்து அனுப்பினர். இந்த மோதல் தொடர்பாக யார் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எப்போதும் கால்பந்து போட்டி மைதானத்தில் இதுபோன்ற மோதல்கள் ரசிகர்கள் மத்தியில் நடைபெறுவது வழக்கம். கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் அடிக்கடி மோதிக் கொள்வார்கள்.
ஆனால் முதல் முறையாக இந்தியா இலங்கை ரசிகர்கள் மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இலங்கைக்கு வந்து பார்க்கும் ரசிகர்களின் பாதுகாப்பை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதி செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தியுள்ளனர். இறுதிப் போட்டியில் இந்தியாவும், இலங்கையும் மோத தான் அதிக வாய்ப்பு உள்ளதால், பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.