கொழும்பு : இந்தியா - இலங்கை அணிகள் 2023 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் ஞாயிறு அன்று மோத உள்ளன. அந்தப் போட்டியில் இலங்கை அணி, இந்தியாவை வீழ்த்த திட்டமிட்டுள்ளது பற்றி சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வலுவாக இருக்கிறது. அதே சமயம், சொந்த மண்ணில் ஆடும் இலங்கை அணியும் தங்களின் வீரர்கள் காயம் அடைந்து இருந்தாலும் இந்த தொடரில் இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

குறிப்பாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை இறுதிப் போட்டிக்குள் நுழைந்து இருப்பதால் இந்திய அணி மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
முன்னதாக 2023 ஆசிய கோப்பை தொடரில் இலங்கை அணியை, இந்தியா சூப்பர் 4 சுற்றில் சந்தித்தது. அந்தப் போட்டியில் இலங்கை அணி முதலில் பந்துவீசி இந்திய அணியை 213 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து இருந்தது. அதிலும் 10 விக்கெட்களையும் சுழற் பந்துவீச்சாளர்களே எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி அந்தப் போட்டியில் பும்ரா, சிராஜ், குல்தீப் என திறமையான பந்துவீச்சாளர்கள் இருந்ததால் குறைவான ரன் எடுத்த போதும், 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இறுதிப் போட்டிக்கான திட்டங்களை இலங்கை அணி வகுத்து இருக்கிறது. அதன்படி, இந்திய அணியை 213 ரன்களில் சுருக்கிய அதே ஆடுகளத்தை கொழும்பு மைதான நிர்வாகிகள் இறுதிப் போட்டிக்கு தயார் செய்வார்கள் என கூறப்படுகிறது.
இலங்கை அணியின் முன்னனி சுழற் பந்துவீச்சாளர் தீக்ஷனா காயத்தால் தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறார் என்பது அந்த அணிக்கு பின்னடைவாக இருந்தாலும், முந்தைய போட்டியில் இந்திய அணியை ஆட்டம் காண வைத்த டுனித் வெல்லாலகே, அசலங்கா உள்ளிட்ட சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். தீக்ஷனாவிற்கு பதிலாக, தசுன் ஹேமந்தா என்ற லெக்பிரேக் பந்துவீச்சாளரை அந்த அணி பயன்படுத்த உள்ளது.
ஆக, இலங்கை அணி சுழல் மூலம் இந்திய அணியை கட்டுப்படுத்தி விக்கெட் வேட்டையாட முடிவு செய்துள்ளது. பேட்டிங்கில் இலங்கை அணி சராசரியாக இருப்பதால், அவர்களுக்கு பந்துவீச்சை மட்டுமே நம்பும் நிலை இருக்கிறது. அதனால், இப்படி ஒரு திட்டத்தை இலங்கை வகுத்துள்ளது.
இந்திய அணியும் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை இறுதிப் போட்டியில் ஆட வைக்க முயற்சி செய்யும். துரதிர்ஷ்டவசமாக சுழற் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் அக்சர் பட்டேல் காயத்தால் இறுதிப் போட்டியில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக வாஷிங்க்டன் சுந்தர் இறுதிப் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.
இந்திய அணி ஒருவேளை பேட்டிங்கில் சறுக்கினால் பந்துவீச்சில் தான் இலங்கை அணியை பணிய வைக்க முடியும். அதற்கேற்ப எவ்வாறு மெதுவான பந்துகளை பேட்டிங் செய்வது என்ற திட்டத்தையும், இலங்கையின் பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவரின் பலவீனம் என்ன என்பதையும் இந்திய அணி திட்டமிட்டே ஆக வேண்டும். சாதாரண அணி என குறைத்து மதிப்பிட்டால் அது இந்திய அணிக்கே பாதிப்பாக மாறலாம்.