கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஆறு அணிகள் இரு பிரிவுகளாக தங்களுக்குள் விளையாடினார்கள். இதில் லீக் சுற்று போட்டி நேற்று முடிவடைந்தது.
இதில் ஒவ்வொரு பிரிவிலும் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இந்த நிலையில் சூப்பர் ஃபோர் சுற்றில், குரூப் ஏ வில் இருந்து பாகிஸ்தானும் இந்தியாவும் குரூப் பி யிலிருந்து இலங்கையும் வங்கதேசமும் தகுதி பெற்றிருக்கிறது.

இந்த நிலையில் சூப்பர் ஃபோர் சுற்று இன்று தொடங்கி வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இடம்பெற்றுள்ள நான்கு அணிகளும் தங்களுக்குள் ஒருமுறை மோதும். இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி இறுதி சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் ஃபோர் சுற்றில் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தானும் வங்கதேசமும் லாகூரில் மோதுகிறது. இதனை அடுத்து இரண்டு நாட்கள் ஓய்வு இருக்கிறது.
அதன் பிறகு செப்டம்பர் ஒன்பதாம் தேதி இலங்கையும், வங்கதேசமும் பல பரிட்சை நடத்துகின்றன. பெரிதும் ஆவலை ஏற்படுத்திருக்க கூடிய இந்தியா பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொழும்புவில் நடைபெறுகிறது. இதை அடுத்து செப்டம்பர் 12ஆம் தேதி மீண்டும் இந்திய அணி இலங்கையை எதிர்கொள்கிறது.
செப்டம்பர் 14ஆம் தேதி பாகிஸ்தான் அணி இலங்கையுடன் மோதுகிறது. பிறகு செப்டம்பர் 15ஆம் தேதி இந்தியா வங்கதேசத்தை எதிர்கொள்ள உள்ளது. இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி வரும் செப்டம்பர் 17ஆம் தேதி இறுதிப்போட்டியில் விளையாட உள்ளது. சூப்பர் ஃபோர் சுற்றில் இன்றைய ஆட்டத்தை தவிர மற்ற அனைத்து போட்டிகளும் கொழும்புவில் நடைபெற இருக்கிறது .
இந்த நிலையில் கொழும்புவில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் லீக் சுற்று ஆட்டத்தை போல் சூப்பர் ஃபோர் சுற்று ஆட்டமும் மழையால் அவ்வப்போது தடைபடும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என ரசிகர்கள் விடுத்த கோரிக்கை நிறைவேறாமல் போய்விட்டது. லீக் சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் ஆட்டமும் முழுமை பெறாததால் வரும் பத்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரு அணிகள் மோதுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.