கொழும்பு: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட நிலையில், திடீரென தண்ணீர் பாட்டில்களுடன் களம் புகுந்த சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்திய அணி ஏற்கனவே முன்னேறிவிட்டதால், இந்தப் போட்டியில் 5 வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, பும்ரா, சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டது.

இதையடுத்து இந்திய அணி தரப்பில் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர் மற்றும் முகமது ஷமி ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து முதல் ஸ்பெல்லை முகமது ஷமி மற்றும் ஷர்துல் தாக்கூர் இருவரும் வீசினர். இருவரும் சிறப்பாக பந்துவீசிய நிலையில், 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வங்கதேச அணி இழந்து தடுமாறியது. இதையடுத்து மெஹதி ஹசன் மிராஸ் கொடுத்த 2 கேட்ச்களை திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் தவறவிட்டனர்.
பின்னர் ஒரு வழியாக மெஹதி ஹசன் மிராஸ் விக்கெட்டை அக்சர் படேல் வீழ்த்தினார். இதன்பின் வீரர்களுக்கு டிரிங்ஸ் பிரேக் வழங்கப்பட்டது. அப்போது திடீரென நட்சத்திர வீரர் விராட் கோலி தண்ணீர் பாட்டில்களை கையில் எடுத்துக் கொண்டு டான்ஸ் ஆடியபடி மைதானத்திற்குள் ஓடி வந்தார். விராட் கோலியை பார்த்த இந்திய வீரர்கள் உற்சாகமாகினர்.
இவரைத் தொடர்ந்து சிராஜ் தண்ணீர் கேன்களை எடுத்துக் கொண்டு பின்னாடியே ஓடி வர, மைதானத்தில் இருந்த ரசிகர்களும் உற்சாகமாகினர். டிரிங்ஸ் முடிவடைந்த பின் அதே உற்சாகத்துடன் மீண்டும் ஓய்வறை நோக்கி விராட் கோலி ஓடினார். என்னதான் ஓய்வு வழங்கினாலும், தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் எந்தவித ஈகோவும் இல்லாமல் விராட் கோலி செய்வது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சில ஓவர்கள் விராட் கோலி மாற்று வீரராக ஃபீல்டிங் செய்ததும் குறிப்பிடத்தக்கது.