லாகூர் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை முதல் தொடங்குகிறது. உலகக்கோப்பை தொடர்க்கு முன் இந்தத் தொடர் நடைபெறுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த முறை டி20 தொடராக நடைபெற்ற ஆசிய கோப்பை இம்முறை 50 ஓவர் தொடராக நடக்கிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய ஆறு அணிகள் மோதுகின்றன.

கடந்த முறை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்திய அணி சூப்பர் ஃபோர் சுற்றில் வெளியேறியது. இதனால் இம்முறை வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இந்தியா களம் இறங்குகிறது. ஆசிய கோப்பையை இந்தியா ஏழு முறையும், இலங்கை ஆறுமுறையும் பாகிஸ்தான் இரண்டு முறையும் வென்றிருக்கிறது. இந்த தொடரில் குரூப் ஏ வில் இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தானும், குரூப் பி யில் ஆப்கானிஸ்தான் ,வங்கதேசம் இலங்கையும் மோதுகிறது.
லீக் சுற்றில் ஒவ்வொரு அணிகளும் தங்களது குரூப்பில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறை மோதும். இதில் புள்ளி அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெறும்.அதில் ரவுண்ட் ராபின் முறைப்படி நடைபெறும். அதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறும். இறுதிப்போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
பாகிஸ்தானில் நான்கு போட்டிகளும் இலங்கையில் ஒன்பது போட்டிகளும் நடைபெற இருக்கிறது. இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த லீக் சுற்றில் இந்திய அணி முதல் இடத்தை பிடித்தாலும் இலங்கையில் விளையாடுவதற்கு ஏதுவாக இரண்டாவது இடம் பிடித்ததாக தான் அறிவிக்கப்படும்.
இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருநாள் கிரிக்கெட்டில் கடைசியாக 2019 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் மோதினார்கள். தற்போது நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இவ்விரு அணிகளும் மோத இருக்கிறார்கள். இந்தப் போட்டியை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவியில் பார்க்கலாம். ஓ டி டியில் டிஸ்னி ஹாட் ஸ்டார் இல் இலவசமாக இந்த தொடரை கண்டு களிக்கலாம்.