மும்பை: 2025 ஆசியக் கோப்பையில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) எதிரான போட்டியில், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் வெளிப்படுத்திய விளையாட்டு உணர்வு (Sportsmanship) நிகழ்வு பாராட்டுகளைப் பெற்றாலும், இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, "இதுவே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியாக இருந்திருந்தால், சூர்யகுமார் யாதவ் இப்படிச் செய்திருப்பாரா?" என்று கேள்வி எழுப்பி சூடேற்றியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியின் போது, இந்திய ஆல்-ரவுண்டர் சிவம் துபேவின் கால்சட்டையிலிருந்து துண்டு கீழே விழுந்ததால், பேட்ஸ்மேன் ஜுனைத் சித்திக் கவனச்சிதறலுக்கு உள்ளானார். அப்போது அவர் கிரீஸை விட்டு வெளியே இருந்ததால், விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் அவரை ரன் அவுட் செய்தார்.

மூன்றாவது நடுவரும் அதை 'அவுட்' என்று அறிவித்தார். ஆனால், பேட்ஸ்மேன் உண்மையிலேயே கவனச்சிதறலுக்கு உள்ளானதை உணர்ந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ், தனது அப்பீலை வாபஸ் பெற்று, சித்திக்கை மீண்டும் பேட்டிங் செய்ய அழைத்தார். இந்தச் செயல் பெரும் பாராட்டுகளைப் பெற்றது.
சூர்யகுமாரின் இந்தச் செயலை வேறு ஒரு கோணத்தில் இருந்து அணுகியுள்ள ஆகாஷ் சோப்ரா, "என்னுடைய பார்வையில் இந்த சம்பவம் போட்டி மற்றும் சூழலைப் பொறுத்தது முக்கியமான விஷயம். இதுவே வரும் செப்டம்பர் 14-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு முக்கியமான கட்டத்தில், அவர்களது வீரர் சல்மான் ஆகா இப்படி கிரீஸை விட்டு வெளியே சுற்றிக்கொண்டிருந்தால், சூர்யகுமார் இப்படி அப்பீலை வாபஸ் பெற்றிருக்க மாட்டார். சஞ்சு சாம்சனின் புத்திசாலித்தனமும், பந்தை ஸ்டம்பில் அடித்ததும் மிகச் சரியானதே."
மேலும், விளையாட்டு நேர்மை என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது இத்தகைய செயல்கள் அழகாகத் தெரிந்தாலும், இது 'பல புதிய சர்ச்சைகளுக்கும், சிக்கல்களுக்கும் வழிவகுக்கும்' (opens a can of worms) என்று சோப்ரா எச்சரிக்கிறார். அதாவது இன்று ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக அவுட் அப்பீலை திரும்பப் பெற்ற சூர்யகுமார் யாதவ், நாளை பாகிஸ்தான் அணிக்கு எதிராக இதை செய்யாவிட்டால் பலரும் கேள்வி எழுப்புவார்கள் என கூறி இருக்கிறார்.
"இதில் பிரச்சனை என்னவென்றால், நீங்கள் எப்போது விளையாட்டு தார்மீகத்தையும், தாராள மனப்பான்மையையும் விளையாட்டுக்குள் கொண்டு வருகிறீர்களோ, அது பல சிக்கல்களுக்கு வழி திறக்கிறது. 'ஓ, இன்று இதைச் செய்தீர்கள், நாளை ஏன் அதே போன்ற ஒரு சம்பவத்தில் இதைச் செய்யவில்லை?' என்ற கேள்வி எதிர்காலத்தில் எழும். அந்தப் பாதைக்கு ஏன் செல்ல வேண்டும்?" என்று இது பற்றி ஆகாஷ் சோப்ரா கூறி இருக்கிறார்.
"நீங்கள் ஒருமுறை இப்படிச் செய்துவிட்டால், அதுவே உங்களுக்கு ஒரு அளவுகோலாகிவிடும். அடுத்த முறை நீங்கள் அப்படிச் செய்யாதபோது, உங்களின் முந்தைய செயல் உங்களைக் கேள்விக்குள்ளாக்கும். அந்த நேரத்தில் நீங்கள் ஒரு பாசாங்குக்காரராக (hypocrite) பார்க்கப்படுவீர்கள். நான் சூர்யகுமார் மீண்டும் இதைச் செய்வாரா, மாட்டாரா என்று சொல்லவில்லை. ஆனால், ஒரு விஷயம் விதிகளுக்கு உட்பட்டு, நடுவரால் அவுட் என்று கொடுக்கப்பட்டுவிட்டால், அது அவுட் தான். அதோடு விட்டுவிட வேண்டும். அதுதான் சரி." என்றார் ஆகாஷ் சோப்ரா.
சூர்யகுமார் யாதவின் செயல் விளையாட்டு உணர்வின் வெளிப்பாடாகப் பார்க்கப்பட்டாலும், போட்டியின் முக்கியத்துவம் மற்றும் எதிரணியின் பலத்தைப் பொறுத்து மாறுபடுமா என்ற ஒரு கேள்வியையும் எழுப்பியுள்ளது. பலம் குறைந்த அணிகளுக்கு எதிராக விட்டுக் கொடுத்தாலும், பலமான அணிகளுக்கு எதிரான போட்டிகளிலும் சூர்யகுமார் யாதவ் ஒரு விக்கெட்டை விட்டுக் கொடுப்பாரா? என்பதே ஆகாஷ் சோப்ரா கேட்கும் கேள்வியாக உள்ளது.